Pages

Sunday, January 12, 2014

"தமிழ்நாட்டில் காதுகேளாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவப் பேருரை விழாவில் (இடமிருந்து) டாக்டர் மோகன் காமேஸ்வரன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பச்சமுத்து, இணை வேந்தர் பி. தங்கராஜு, பதிவாளர் என். சேதுராமன்.

தாம்பரம், 09 January 2014
இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் காதுகேளாதோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அத்தை, மாமன் உறவு முறை திருமணப் பழக்கம்தான் காரணம் என்று சென்னை காது, மூக்கு, தொண்டை ஆய்வு மையம் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற செவித்திறன் குறைபாடு குறித்த மருத்துவ சிறப்புப் பேருரை விழாவில் அவர் மேலும் பேசியது:

உலகில் செவித்திறன் குறைபாடு ஆயிரத்தில் ஒருவருக்கும், இந்தியாவில் ஆயிரத்தில் 3 பேருக்கும், தமிழ்நாட்டில் ஆயிரத்தில் 6 பேருக்கும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அத்தை, மாமன் உறவில் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு காது கேளாமை குறைபாடு அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். காது கேளாமைக் குறைபாடு பற்றி கண்டறியவும், உடனடியாக உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும் போதிய பரிசோதனை மையங்கள் இல்லை. தனியார் மருத்துவமனைகள்,மருத்துவக் கல்லூரிகள் சேவை நோக்குடன் மாவட்ட அளவில் கிராமங்களைத் தத்தெடுத்து மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உதவுவதன் மூலம் போலியோ நோயை அறவே ஒழித்து இருப்பது போன்று காது கேளாமை குறைபாட்டையும் ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். காது கேளாமை குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பேசும்போது, எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது அருகில் உள்ள சுமார் 40 கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. டாக்டர் மோகன் காமேஸ்வரனின் வேண்டுகோளை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு

இலவச மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை வழங்க எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தயாராக உள்ளது என்றார். விழாவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பி.தங்கராஜு, பதிவாளர் என்.சேதுராமன், மருத்துவக்கல்லூரி டீன் ஜேம்ஸ் பாண்டியன், துறைத்தலைவர் கே.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thanks to

No comments:

Post a Comment