Pages

Monday, April 28, 2014

மாற்றுத்திறனாளிகளிடம் விடாமுயற்சி இருக்க வேண்டும்: சகாயம்

27.04.2014, சென்னை
 மாற்றுத்திறனாளிகள் விடா முயற்சியோடு செயல்பட்டால் தங்களது இலக்கை அடைய முடியும் என கோ-ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ. சகாயம் கூறினார்.

சென்னை புரசைவாக்கத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின், அனைத்து மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை பேரவையின் 14-ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட சகாயம் பேசியது: அனைத்துத் தரப்பு மக்களின்
வளர்ச்சியை உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சியில், மாற்றுத்திறனாளர்களின் பங்கு அவசியமானது. நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாற்றுத்திறனாளர்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகள் செய்யப்பட்டன. அதில், குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமையியல் பணிகளுக்கான பயிற்சிகளைப் பெற மாற்றுத்திறனாளர்களுக்கென வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளர்கள் உடலளவில் உள்ள குறைகளைப் பற்றி எண்ணுவதை தவிர்த்து விட்டு, மனதளவில் உறுதியோடு செயல்படுவது அவசியமானது. அதிலும், விடா முயற்சியோடு முயன்றால் தங்களது இலக்கை அடைய முடியும் என்றார்.

இதில், மனவளர்ச்சி குன்றிய பெண்கள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளின் தாய்மார்கள் 35 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேவதி சங்கரன், கோத்தாரி குழுமத்தைச் சேர்ந்த சுரேகா கோத்தாரி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் சிதம்பரநாதன், அனைத்து மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை பேரவைச் செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் குறித்த விவரம்:

வீடு இல்லாத பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும். மாத உதவித் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.3000-மாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Thanks to Dinamani

No comments:

Post a Comment