Pages

Friday, July 25, 2014

மாற்று திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்: முதல்வர் அறிவிப்பு

25.07.2014 சென்னை:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று, பேரவை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிக்கை:

மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் தற்போது 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்படும். இதற்கென அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்து 10,800 கூடுதல் செலவு ஏற்படும்.

தமிழ்நாட்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான தங்கும் வசதி, உணவு மற்றும் தொழிற் பயிற்சியுடன் கூடிய 31 இல்லங்கள், 21 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களை தருமபுரி, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆண்களுக்கும், விருதுநகர், அரியலூர், திருப்பூர், நீலகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் பெண்களுக்கும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 34,800 செலவு ஏற்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில், விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.650 வீதம் உணவூட்டுச் செலவினம் வழங்கப்படுகிறது. இச்சிறப்புப் பள்ளிகளில், தற்போது மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், சுமார் 1,733 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.38 லட்சத்து 99,250 கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-Tamil Murasu

No comments:

Post a Comment