Pages

Friday, April 24, 2015

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: ஏப்ரல் 24 முதல் விண்ணப்பிக்கலாம்

22.04.2015, காஞ்சிபுரம் பள்ளிகளில் உள்ள 204 ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோர் வருகிற 24 முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறியது: பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்

பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில், வருகிற 24 முதல் மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 204 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். 18 வயதுக்கு உள்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகியோர் அதிகபட்சம் 32 வயதாக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள், விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்),

பழங்குடியின வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஆண் விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே சின்னகொலம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியிலும், பெண் விண்ணப்பதாரர்கள் தாம்பரம் சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ. 100, சேவைக் கட்டணம் ரூ. 50 குறிப்பிட்ட சேவை மையங்களில் ரொக்கமாக செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினர் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment