Pages

Thursday, May 14, 2015

'டிஜிட்டல்' காதுகேட்கும் கருவியால் குழந்தைகளுக்கு பெரும் பயன்

14.05.2015, பந்தலூர்:
பந்தலூரில் நடந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட நிர்வாகம்; ஆதிவாசிகள் நலச்சங்கம்; விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் டிரஸ்ட்; மத்திய அரசின் அலியாவர் ஜங் தேசிய நிறுவனம் ஆகியவை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தினர்.'நாவா' திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் தலைமை வகித்தார். தேசிய நிறுவன நிர்வாகி டாக்டர் அருண்பானிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், "கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் காதுகேட்கும் திறனை இழந்துள்ளதை தடுக்கும் வகையில், சமூக நோக்கத்தோடு முகாம்களை நடத்தி, 10ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காதுகேட்கும் கருவி இலவசமாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறையிலான காது கேட்கும் கருவி என்பதால், குழந்தைகளுக்கு இந்த கருவி பெரும் பயனுள்ளதாக அமையும்.அதேபோல, நடக்க முடியாத நபர்கள் பயன்படுத்தும் வகையில், தள்ளுவண்டி, செயற்கை கால் போன்றவையும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முகாம்களில் ஏழை மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்,” என்றார். நிகழ்ச்சியில், டாக்டர்கள் கார்த்திகேயன், ஷர்டாபட்கர், நவீன் செந்தில்குமார், ஜெய்கணேசமூர்த்தி, பூர்னாஜித், கருப்புசாமி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சையளித்தனர். தேசிய அறக்கட்டளை நிர்வாகி நிக்கோலஸ்,நல அலுவலக பணியாளர் விஜயன், சி.டி.ஆர்.டி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நாவா பணியாளர்கள் நீலகண்டன், புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment