Pages

Monday, August 17, 2015

கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் மறியல்: மாற்றுத்திறனாளிகளை தரதரவென இழுத்து சென்றது போலீஸ்

16.08.2015, மதுரை: மதுரையில் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 13ம் தேதி மதுரை காளவாசலில் உண்ணாவிரதத்தை துவக்கினர். அடுத்த நாள் உண்ணாவிரத பந்தலை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர். எனினும் கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். 3ம் நாளான நேற்று முன்தினம் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு இறங்க மறுத்தவர்களை டும் வாக்குவாதத்திற்கு பின்னர் வளாகத்தில் இறக்கி விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே சிலர் தத்தனேரிக்கு சென்று, சுடுகாட்டில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

4வது நாளாக நேற்றும் மாற்றுத்திறனாளிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். நடு ரோட்டில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்தனர். போலீசார் வந்து பேசியும் மறியலை கைவிட மறுத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். சிலர் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து, அவரது முகத்தில் பீய்ச்சி அடித்து, மயக்கத்தை தெளிய வைக்க முயன்றனர். திடீரென போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரையும் வலுக்கட்டாயமாக சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே இழுபறி ஏற்பட்டதால், பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர். போலீசார் விடாமல் இழுத்து சென்று, அனைவரையும் கைது செய்து, வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment