Pages

Tuesday, October 27, 2015

மாற்றுத்திறனாளி என போலி சான்றிதழ் கொடுத்த அரசு ஊழியர் 108 பேர் சஸ்பெண்ட்

27.10.2015, புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழை போலியாக கொடுத்து நகராட்சி, ேபரூராட்சிகளில் பணியில் சேர்ந்த 108 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுவரை அவர்கள் பெற்ற சம்பளத் தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, யூனியன்களில் 2011ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றதும் ஆயிரக்கணக்கானோர் அலுவலக உதவியாளர் முதல் பணி ஆய்வாளர் வரை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஏராளமானோர் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு மாற்றம், இனச்சுழற்சி ஆகியவற்றில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

நெல்லை மாவட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, வி.கே. புரம், அம்பை ஆகிய 7 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பலர் பணியில் சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி மாற்றுத்திறனாளிகள் சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக ஏர்வாடி, பத்தமடை உள்ளிட்ட பேரூராட்சிகளைச் சேர்ந்த 7 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட நகராட்சிகளில் போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக 24 பேரை அந்தந்த நகராட்சி ஆணையர்கள் சஸ்பெண்ட் செய்தனர். 24 பேரும் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தங்கள் சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடையாணை வாங்கி மீண்டும் பணியில் சேர்ந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி துறைகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் குறித்து, சிபிசிஐடி விசாரணை நடத்த மாநில உள்துறை முதன்மை செயலாளருக்கு கடந்த ஜூலை 29ம் தேதி கலெக்டர் கருணாகரன் பரிந்துரை செய்தார்.

மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக்குழு முன்பு நேரில் ஆஜராகி மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டுமெனவும் கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி, மருத்துவக்குழு முன்பு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆஜராகினர். இதற்கிடையில், இம் மாதம் முதல் வாரத்தில் மருத்துவக்குழு அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அளிக்கப்பட்டது.

அதில் போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 108 பேரின் பெயர் மற்றும் முகவரியிட்டு அவர்கள் மாற்றுத் திறனாளிகள் இல்லை என சான்று வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 108 பேரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கையாக, அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக அரசிடம் பெற்ற ஊதியத்தை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment