Pages

Tuesday, December 29, 2015

பயணப்படி பெற புதிய அரசாணை: மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

29.12.2015, சேலம்:
 'பயணப்படி பெறுவதில், நீடிக்கும் குழப்பத்தை நீக்க, புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், அரசு ஊழியராக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊர்தி படியாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அதிகாரி ஒப்புதல் ஏற்று, ஊர்திபடி வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள், தொடர்ந்து, முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அலுவலர், ஊர்திபடி வழங்க அதிகாரம் வழங்கி கடந்த 22ம் தேதி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஊர்திபடிக்கு சான்றாக, தேசிய அடையாள அட்டை பயன்படுத்துவது குறித்து, உத்தரவில் குறிப்பிடாதது, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக, மாற்றுத்திறனாளிகள், கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன் கூறியதாவது: மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரால், ஊனத்தின் சதவீதம், தன்மை ஆகியவற்றை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு வழங்கப்படும், தேசிய அடையாள அட்டையை, ஊர்திபடி பெற சான்றாக ஏற்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி மாநில ஆணையம், கருத்துரு அனுப்பியும், அதுபற்றி, அரசு உத்தரவில், குறிப்பிடாதது குழப்பமாக உள்ளது. எனவே, ஊர்திபடிக்காக, தனியாக சான்றுபெறும் நிலை உள்ளது. செவித்திறன் இழந்து, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திபடி வழங்குவது தொடர்ந்து, மறுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஊர்திபடி கிடைக்க, புதிய அரசாணை வெளியிட்டு, தமிழக அரசு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment