Pages

Friday, December 25, 2015

தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்,  25 December 2015
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்குத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:

மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்களுக்கு), நிலம் மேம்பாட்டுத் திட்டம் (இரு பாலருக்கும்), தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை, மருந்துக் கடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் போன்ற தொழில்கள் தொடங்க தாட்கோவில் விண்ணப்பிக்கலாம்.

மகளிர் சுய உதவிக் குழு, கலப்புக் குழு, ஆண்கள் சுய உதவிக் குழு, திருநங்கைகள் சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளி சுய உதவிக் குழு ஆகியவற்றுக்கான சுழல் நிதி, பொருளாதாரக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆட்சியர் தன் விருப்புரிமை நிதி மற்றும் மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 40 வயதுக்கும் அதிகமான திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் - பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்புகிறவர்கள் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த ஆதிதிராவிட மக்கள் இத்திட்டங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

No comments:

Post a Comment