Pages

Wednesday, January 27, 2016

இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு 2வது முறையாக அபராதம் விதிப்பு

26.01.2016
பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காத தமிழக அரசுக்கு, இரண்டாவது முறையாக 10,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயண ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கு குறித்து 2 வார காலத்திற்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி 3 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாடு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, தமிழக அரசுக்கு நீதிபதிகள் 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் 10,000 ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment