Pages

Saturday, January 9, 2016

"மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்'

கோவை, 08 January 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில், லூயி பிரெய்லி பிறந்த நாள் விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, உலக மாற்றித் திறனாளிகள் தின விழா ஆகிய முப்பெரும் விழா கோவை, உப்பிலிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் வரவேற்றார். இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் 34 பேருக்கு, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பல்கலைக்கழக மாற்றுத் திறனாளிகள் மையத் தலைவர் பிராபாவதி சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, பி.மனோகரன் பேசியதாவது:

மத்திய அரசு சார்பில், பார்வையற்றோருக்கு 4,500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அரசு அறிவித்தபடி இந்தப் பணியிடங்களுக்கான அழைப்பு இந்த மாதத்துக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசிடமிருந்து 800 பணியிடங்களுக்கான விளம்பரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றன.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் உள்ளிட்ட சில உரிமைகளை கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சர்கள், பிரதிநிகள் கூறி வருகின்றனர். இதனால், மாற்றுத் திறனாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014 இதுவரை வெளியிடப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. இதை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

இதில், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் க.கணேஷ், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் ப.தமிழரசு. கோவை மாவட்டத் தலைவர் அ.கணபதி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment