Pages

Saturday, February 6, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை: ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை

கோவை, 05 February 2016
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக கோவையில் தேசிய பார்வையற்றோர் இணையம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், காதுகேளாதோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பார்வையற்றோர் இணைய மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.டோமினிக் சின்னகண்ணன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமிருப்பவர்களுக்கும் அரசின் உதவித் தொகையை வழங்க வேண்டும். தேவையற்ற விதிகளை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் 3 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) சமூகப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கே.சத்யவேந்தன், ஜி.என்.மோகனசுந்தரம், ரங்கநாதன், ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment