Pages

Friday, June 17, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை: ஐ.நா.வில் இந்தியா தகவல்

16.06.2016
இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தன்மை வாய்ந்த பிரத்யேக அடையாள அட்டையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஐ.நா. சபையில் மத்திய அமைச்சக செயலர் வினோத் அகர்வால் தெரிவித்தார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் செயலரான வினோத் அகர்வால் பங்கேற்றுப் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், இந்தியா முழுவதும் அவரை அடையாளம் காணும் நோக்கில், தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளின் கல்வித் தகுதி, வருமானம், பணி நிலை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தகவல்களும் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தகவல்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான மத்தியப் பல்கலைக்கழகத்தை கேரளத்தில் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். அவர்களில் 80 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 2.7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் நல மசோதா, நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா, மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று வினோத் அகர்வால் பேசினார்.

No comments:

Post a Comment