Pages

Wednesday, September 27, 2017

செவித்திறன், பேச்சுத்திறன் பயிற்சி கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும்!


திருச்சி, செப்.27 செவித்திறன், பேச்சுத்திறன் பயிற்சி கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி கூறினார்.

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று (செப்.27) காலை 11 மணிக்கு நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மதராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், உலகப் புகழ்பெற்ற காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை நிபுணருமான பத்மசிறீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் தமது உரையில்,

உயிர்காக்கும் மருத்துவத் துறை என்பது நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அவ்வளர்ச்சிக்கேற்ப மருந்தாளுநர்கள், தொழில் நுட்பத்துடன் கூடிய ஆராய்ச்சி அறிவினை வளர்த்துக் கொள்வதோடு, சேவை மனப்பான்மையோடும் பணியாற்ற வேண்டுமெனக் கூறி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்துப் பேசும்போது,

நலவாழ்வு என்பது அனைவரையும் சென்றடையவேண்டும்.மருத்துவசிகிச்சை முறைகளில்ஏழை,பணக் காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கும் மருந்தாளுநராக ஒவ் வொருவரும் உருவாக வேண்டும். அத்தகைய தொண்டற மனப்பான்மையோடு மாணவர்கள் சமுதாயத்தில் செயல்படவேண்டும். மேலும் செவித்திறன், பேச்சுத் திறன் பயிற்சிகளுக்காக வரும் கல்வி யாண்டில் கல்லூரி தொடங்கப்படும் என்று கூறினார். பின்னர் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும்,பாராட்டு களையும் தெரிவித்துக்கொண்டார். இவ் விழாவிற்கு பெரியார் மணியம்மை பல் கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞான.செபஸ்தியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை ஆண்டறிக்கை வாசித்தார்.

முன்னதாக பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இப்பட்டமளிப்பு விழாவில் 38 முதுநிலை மருந்தியல் மாணவர்களும், 107 இளநிலை மருந் தியல் மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.

No comments:

Post a Comment