Pages

Thursday, April 19, 2018

புதிதாக பிறந்த குழந்தைகளின் காது கேளாமையை கண்டறிய விரைவில் 162 மையங்கள்

18.04.2018
இன்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் காது வால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 126 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்து 47 ஆயிரம் செலவில் துணை பாகங்களை வழங்கினார்.

அப்பொழுது பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:–

அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவையை எளிதில் வழங்கும் உயரிய நோக்கத்துடன் நோயாளிக்குத் தேவைப்படும் சிகிச்சையை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கி பொருளாதார பாதுகாப்பு வழங்கிட புரட்சித் தலைவி அம்மாவால் 11.1.2012 அன்று ‘‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்” என்ற உயரிய முன்னோடி திட்டம் புரட்சித் தலைவி அம்மாவால் தொடங்கி வைக்கப்பட்டது.

2968 குழந்தைகளுக்கு அறுவை சிச்சை

இத்திட்டத்தில் 6 வயதுக்கு உட்பட்ட காது கேளாமை நரம்பியல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது வால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளால் பேசவும், கேட்கவும் இயலும். ஆகவே இவர்கள் மற்ற குழந்தைகள் போல் இயல்பான வாழ்க்கையை வாழலாம். இதுவரையில் இத்திட்டத்தில் 2,968 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிச்சை மேற்கொள்ளப்பட்டு 241.76 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

காது வால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பயனாளிகளுக்கு, இச்சிகிச்சைக்குப்பின் பயன் குறித்தும் உடல் நலம் குறித்தும் கண்காணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. காது நுண் எலும்பு கருவி பாகங்கள், பேட்டரி, கேபிள் மற்றும் வெளிப்புற பேச்சு செயலி போன்றவை பழுது அடைவது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

இதனை சரி செய்ய ஏற்படும் செலவு மிக அதிகமாக உள்ள காரணத்தினாலும் பயனாளிகள் இச்செலவை ஏற்கக்கூடிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினாலும், விலை மதிப்பில்லாத சிகிச்சை மூலம் தொடர்ந்து பயன்பெறும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். இப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சேதமடைந்த, குறைபாடுள்ள காது நுண் எலும்பு கருவி பாகங்கள் தேசிய சுகாதார குழுமம், மற்றும் ஆர்.பி.எஸ்.கே. (RBSK) நிதி மூலம் சேதமடைந்த காது நுண் எலும்பு கருவி பாகங்களை எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கி இக்குழந்தைகள் தொடர்ந்து செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் பெற வழிவகை மேற்கொள்ள அம்மாவின் வழியில் செயல்படும் இவ்வரசு முடிவு செய்துள்ளது.

162 மையங்கள்

அம்மாவின் அரசு தனது முன்னோக்கிய பாதையில் புதிதாக பிறந்த குழந்தையின் காது கேளாமை கண்டறியும் பரிசோதனை கருவியான ஒலி ஒலியியல் கருவியை (Oto Acoustic Emission), குழந்தை பிறந்தவுடன் பயன்படுத்தி கண்டறியவும் திட்டமிட்டுள்ளது, சோதனை முயற்சியாக இந்த பரிசோதனை 162 சீமாங்க் மையங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும். இதன் மூலம் காது கேளாமை குறைபாட்டை தமிழகத்தில் இருந்து முற்றிலும் நீக்குவதே அம்மா அரசின் லட்சியமாகும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பதிவு செய்த ஒரு வருடத்திற்குள் தேசிய தரச்சான்று (முதல்நிலை) அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 6,125 நபர்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சைகள் ரூ.442.43 கோடியில் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ரூ.1,512.05 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் சுய சார்பு நிலையை எட்டியுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ராஜாராமன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் பி. உமாமகேஸ்வரி, கூடுதல் இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மருதுவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இன்பசேகரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் மருத்துவ உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment