Pages

Friday, July 20, 2018

விரைவான நீதிதான் தீர்வு...


ஜூலை 20, 2018
நாடு முழுவதும் பெண்கள், சிறுகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று தேசிய ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2007–ல் நாடுமுழுவதும் ஒருமணி நேரத்தில் 2 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தது, 2016–ல் 4 கற்பழிப்புகள் நடந்திருக்கின்றன. 2016–ல் ஓராண்டில் 38 ஆயிரத்து 947 கற்பழிப்பு சம்பவங்கள் நாட்டில் நடந்துள்ளன. இதில், பாதிக்கப்பட்ட 95 சதவீதம் பேருக்கு குற்றவாளிகள் நன்றாக தெரிந்தவர்கள். அதிலும் 29 சதவீதம்பேர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள ‘கதுவா’ என்ற கிராமத்தில், தாங்கள் வளர்த்துவரும் குதிரைகளை தேடிக்கொண்டு காட்டுக்குள் சென்ற 8 வயது சிறுமியை, 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்த சம்பவம் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்றால், சென்னையில் 7–வது வகுப்பு படிக்கும் 11 வயது செவித்திறன் குறைந்த சிறுமியை அவரது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ‘லிப்ட்’ ஆப்ரேட்டர்கள் தொடங்கி, 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் எல்லோருடைய நெஞ்சையும் பதறவைத்தது.

இந்தக்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சிலர் தாத்தா வயதிற்கு சமமானவர்கள். ‘லிப்ட்’ ஆப்ரேட்டரை அந்த சிறுமி ‘தாத்தா’ என்றுதான் கூப்பிட்டு வந்திருக்கிறார். போதை ஊசி மருந்துபோட்டு, கத்தியைக்காட்டி மிரட்டி, ஒரு பாவமும் அறியாத அந்தசிறுமியை இந்த காமக்கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இந்தசம்பவம் கடந்த 7 மாதங்களாக நடந்திருக்கிறது. பெண் குழந்தைகள் தனியாக வெளியே அனுப்பப்படுவதற்கே அச்சப்படும் நிலையில், ‘‘யாரைத்தான் நம்புவதோ, பேதை நெஞ்சம்’’ என்று சொல்லும் அளவிற்கு தெரிந்தவர்கள்தான் இந்த செயலை அரங்கேற்றியிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில், புலன்விசாரணையும், வழக்குகளில் வாதமும் அமையவேண்டும். ஏனெனில், சிறுகுழந்தைகளை பாலியல் கொடுமைசெய்த வழக்குகளில் நாடுமுழுவதும் 20 சதவீதத்துக்கும் குறைவான வழக்குகளில்தான் தண்டனை கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 2017–ம் ஆண்டு மட்டும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் 1,587 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கும், கைதுசெய்தபின் புலன் விசாரணையை முடிப்பதற்கும், குற்றப்பத்திரிகை தாக்கல்செய்வதற்கும் காலதாமதமாகிறது. அதன்பின்பு வழக்குகள் நடந்து தீர்ப்புவருவதற்கு நீண்டநெடுங்காலமாகிறது. நமது சட்டங்களில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், குற்றச்சாட்டுகளை முறையாக நிரூபிக்கத்தவறும் பட்சத்திலும், அந்தவழக்குகளை திறமையான வாதங்கள் மூலம் நடத்திமுடிப்பதில் ஏற்படும் குறைபாடுகளாலும், குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் போய்விடுகிறது. 2012–ம்ஆண்டு நடந்த ‘நிர்பயா’ சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆக, குற்றம்செய்தால் உடனடி தண்டனை நிச்சயம் என்ற அச்சஉணர்வு குற்றவாளிகளுக்கு ஏற்படவேண்டும். நமது போலீசார் குற்றவாளிகளை நிச்சயமாக கண்டுபிடித்துவிடுவார்கள். நாமும் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என்ற பயமும் இருக்கவேண்டும். ஆக, ஒவ்வொன்றுக்கும், அதாவது குற்றங்களை தடுப்பதற்கு முதலில் உரியசூழ்நிலையை உருவாக்கவேண்டும். அப்படி ஏதாவது சம்பவம் நடந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், புலன்விசாரணை முடிப்பதற்கும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும், வழக்குகளை நடத்திமுடிப்பதற்கும் உரியகாலக்கெடுவை நிர்ணயிப்பது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment