Pages

Saturday, January 12, 2019

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

11.01.2019
சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த காது கேளாத 12 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். மேலும் சிறுமி மன ரீதியிலும் பாதிப்படைந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர், சிலர் தன்னிடம் பாலியல் ரீதியிலான தொந்தரவில் ஈடுபட்டதாக அழுது கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி புகார் தெரிவித்தனர்.

காவல்துறை விசாரணையில், சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த காவலாளி, லிப்ட் ஆபரேட்டர், பிளம்பர் என அடுத்தடுத்து 17 பேர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டர்களான 4 பேர், காவலாளிகளான 4 பேர், பிளம்பராக உள்ள 4 பேர் உட்பட மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் 16 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தை எதிர்த்து 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனைக்குழு உரிய காலத்தில் விசாரணை நடத்தாததால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment