Pages

Sunday, January 23, 2022

வாய் பேச இயலாத வயதான தம்பதியின் நிலத்தை திமுக ஊ.ம.தலைவர் அபகரிக்க முயற்சி: முதியோர் கண்ணீர் கோரிக்கை

21.01.2022
சேலம் மாவட்டம் வீராணம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் கனகராஜ், பாஸ்கரன் ஆகியோர் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளியான மற்றொரு மகன் நடராஜனுடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முனியம்மாள் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகில் 12 சென்ட் நிலத்தை 2005ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலத்தை கோராத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக ஊராட்சி கழகச் செயலாளருமான சுப்பிரமணியம் மற்றும் நிலத்தில் அருகிலுள்ள சக்திவேல் உள்ளிட்டோர் அபகரிக்க முயற்சி செய்வதாக வீராணம் காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார் செய்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் முனியம்மாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது .

இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் சக்திவேல் ஆகியோர் மீண்டும் நிலத்தை ஆக்கிரமித்து நெருக்கடி கொடுத்து துன்புறுத்தி வருவதாகவும் இதனை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை ஆதாரத்துடன் கொடுத்துள்ளனர்.

''தங்களை தினந்தோறும் மிரட்டுவதாகவும் இதனால் அங்கு வசிக்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் தங்க கஷ்டப்பட்டு வாங்கிய நிலத்தை விட்டு விட்டு செல்லுமாறு அவர்கள் மிரட்டி வருவதாகவும் இதனால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கோரி எங்களுக்கு சொந்தமான நிலத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்'' எனக் கோரி மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் நில அபகரிப்பு புகாரால் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பது கட்சி நிர்வாகிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



No comments:

Post a Comment