Pages

Thursday, May 22, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது


21.05.2025 
இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக தேர்தலை அணுகிட மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைத்து காலாண்டு தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியலில் தற்போது வரை உள்ள 14,243 மாற்றுத்திறனாளிகள் உள்ளது. இவர்கள் இலகுவாக அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு குழுவானது மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வாக்குச்சாவடி வாரியான அவர்களின் வாக்குப் பதிவை உறுதி செய்தல், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் புதுப்பிக்கப்பட்ட தரவை மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வகை உட்பட பராமரித்தல் வேண்டும். வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை எளிதாக்குதலை உறுதி செய்ய வேண்டும். எளிதில் அணுகக்கூடிய வாக்குச் சாவடி மற்றும் எளிதில் அணுகக்கூடிய வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, வாக்குகளை பதிவு செய்வதற்கு தடையற்ற சூழலை உருவாக்குதல் வேண்டும். தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிறப்பித்த பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்தி தேர்தல் செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளின் திறமையான மற்றும் பயனுள்ள பங்கேற்பை உறுதி செய்தல் வேண்டும். தேர்தல் பணியாளர்களுக்கான அனைத்து பயிற்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளின் சிறப்புத் தேவைகள் குறித்த விவரங்களை சேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை மற்றும் அவர்களுடைய வாக்கை பதிவு செய்வதற்கான விழிப்புணர்வுக்காக சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கென சக்ஸாம் (Saksham) என்ற மொபைல் செயலியை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. இச்செயலியில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்தல், பதிவை இடமாற்றம் செய்ய மற்றும் திருத்தம் செய்தல், மாற்றுத் திறன் வகையை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தல், குரல் ஒலி உதவி, காது கேட்கும் திறன் குறைபாடுள்ளோர்க்கான- எழுத்திலிருந்து குரல் ஒலியாக மாற்றும் உதவி (Text to Speech), பெரிய அளவிலான எழுத்து- வண்ணம் கொண்ட பதிவுகள், வாக்குச் சாவடியின் அமைவிடம், வாக்குச் சாவடியில் அமைந்துள்ள வசதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களின் தொடர்பு எண்கள், தேர்தல் செயல்பாடுகள் குறித்த புகார்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகள் இலகுவாக தேர்தலை அணுகுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி கலைச்செல்வி, தேர்தல் வட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment