Pages

Friday, June 13, 2025

273 சேவை மையங்கள் திறக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் தகவல்


13.06.2025
சென்னை:''நடப்பாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்காக 273 சேவை மையங்கள் திறக்கப்படும்,'' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக, 'டெக் பார் ஆல் - 2025' என்ற பெயரில், தொழில்நுட்ப உதவி உபகரண கண்காட்சி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.

கண்காட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்களை தயாரிக்கும் 48 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி, இயக்குநர் லட்சுமி ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

கண்காட்சியில், நொய்டாவை சேர்ந்த, 'ஷாப் பார் ஸ்பெஷல்ஸ்' என்ற நிறுவனம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, செயற்கை நுண்ணறிவு வாயிலாக இயங்கக்கூடிய, 'ஹார்க் ஏ.ஐ., இன்ஸ்டன்ட் ரீடர்' என்ற கருவியை பார்வைக்கு வைத்துள்ளது.

இக்கருவி, பி.டி.எப்., நாளிதழ், லெட்டர் போன்றவற்றை ஸ்கேன் செய்து, அதில் உள்ள வாசகங்களை தெரிவிக்கிறது.

இக்கருவி, 250க்கும் மேற்பட்ட மொழிகளை படிக்கவும், மொழிபெயர்க்கவும் செய்யும். கண்காட்சியில், 5,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான நவீன உபகரணங்கள் உள்ளன.

கண்காட்சியை துவக்கி வைத்த பின், மதுமதி அளித்த பேட்டி:

தமிழகத்தில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப உதவி உபகரண கண்காட்சி நடக்கிறது. தற்போது, மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது; அவர்களுக்கு, 'டி.என்., ரைட்ஸ்' திட்டம் வாயிலாக, மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதன் வாயிலாக, பல மாற்றுத்திறனாளிகள் தாங்களாகவே எழுந்து நடக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஏற்கனவே, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு வழங்கப்படும், சிறப்பு கல்வி, பார்வை மதிப்பீடு, கேட்டல் மற்றும் பேச்சு சிகிச்சை, பிசியோதெரபி, தொழில் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட ஆறு சிறப்பு மறுவாழ்வு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்க, அனைத்து மாவட்டங்களிலும், 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment