Pages

Tuesday, June 3, 2025

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள்! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்


03.06.2025
சென்னை: நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டதிருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சட்டசபையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த 2 சட்ட முன்வடிவுகளை அறிமுகப்படுத்த போகிறோம். இந்த துறைக்கென நிதி ஒதுக்கீடு ரூ 667 கோடியாக இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் ரூ 1,432 கோடியாக உயருகிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலம் தமிழகம்தான். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனர். இதேபோல, மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்துவதை தனியார்த் துறைகளில் ஊக்குவிக்க, குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு மாதம் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஊதிய மானியத்தை ஒரு ஆண்டுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

இவற்றுக்கெல்லாம் மணிமகுடம் சூட்டும் வகையில் சட்டமசோதா நிறைவேற்றப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள். இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத்திறனாளிகள் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து இரு சட்ட மசோதாக்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துவிட்டார்.

தற்போது உள்ளாட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். இந்த நிலையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள்.


No comments:

Post a Comment