Pages

Wednesday, November 26, 2025

உலக மாற்றுத்திறனாளி தினம்... 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஓவியப்போட்டி !




25.11.2025 
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் ஓவிய போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சமூகத்தில் அவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க விளையாட்டுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் பிற சிறப்புப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு சார்பில், தடகளம், செஸ், கைப்பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி, வருகிற டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் , சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப்பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பயின்று வரும் செவித்திறன் குறைபாடுடையோர் (Hearing Imparied), இயக்கத்திறன் குறைபாடுடையோர் (Locomotor Disability), அறிவுசார் குறைபாடுடையோர் (Intellectual Disability). பார்வைத்திறன் குறைபாடுடையோர் (Visually Impaired) ஆகிய மாணவ/மாணவியர்களுக்கு ஓவியப்போட்டிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் சிறப்பு குழந்தைகள் பங்கு பெற்று தங்களின் ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு முதல் இடத்திற்கு ரூ.1,000 மும், 2 ஆம் இடத்திற்கு ரூ.500 ம். 3 ஆம் இடத்திற்கு ரூ.250 ம் பரிசுத்தொகை உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படும். மேலும், இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் ஓவியங்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment