Pages

Thursday, May 26, 2016

இன்ஜினியராக வேண்டும் என்பதே குறிக்கோள் மாநில முதலிடம் பெற்ற காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாணவர்

26.05.2016, மோகனுார்: 'இன்ஜினியராக வேண்டும் என்பதே என் குறிக்கோள்' என, மாற்றுத்திறன் கொண்ட மாணவர் பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, மோகனுார் அரசு பள்ளி மாணவர் அன்பரசன் கூறினார்.

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, மாணவர் அன்பரசன், காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் பிரிவில், 377 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

அவர், தமிழில், 94, கணித பாடத்தில், 92, அறிவியலில், 97, சமூக அறிவியலில், 94, என, மொத்தம், 377 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மோகனுார் ஒன்றியம், மல்லப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கருப்பண்ணன், நிர்மலா தம்பதியரின் மகனான அன்பரசன் கூறியதாவது:எனக்கு பிறவிலேயே செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ளது. மோகனுார் அரசு ஆண்கள் பள்ளியில் வாய்பேச முடியாத, செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, தனியாக வகுப்பு நடத்தப்படுகிறது. எங்களுக்கு, 4 பாடங்கள் மட்டுமே, ஆங்கிலம் கிடையாது. மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலத்தில், இன்ஜினியராக வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment