Pages

Wednesday, January 11, 2017

நம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம் அசத்தும் மாற்றுத்திறனாளி DEAF மாணவர்

07.01.2017
நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். அதுவும் ஒரு மாற்றுத்திறனாளி மாணவன் கல்லுாரியில் உயர்கல்வி கற்று தொடர்ந்து சாதனை படைப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் இயலாத காரியம்.
இறைவனின் படைப்பில் தான் எத்தனை வகை படைப்புக்கள் உள்ளன. அதுவும் வாய்பேச முடியாமலும், காதுகேட்காத சூழ்நிலையிலும் மனம் தளராமல் வாழ்க்கையில் உயர்ந்து சாதித்துக்காட்டுவோம் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தான் எத்தனை பேர்.

வறுமை எங்களை வாட்டினாலும் பரவாயில்லை; நாம் பெற்ற குழந்தைகளாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று உறுதியான எண்ணத்துடனும், மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர, ஒரே வழி உயர்கல்வி கற்க வைப்பது தான் உறுதியான முடிவோடு, பெற்ற மகனை கல்லுாரியில் சேர்த்து அழகு பார்க்கும் பெற்றோரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
கோவை மாவட்டம் வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கல்லுாரி நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் பழநியை சேர்ந்த காதுகேளாத, வாய் பேச முடியாத மாணவனை சேர்க்க, பல்வேறு கல்லுாரிகள் முன்வராத நிலையில், வால்பாறை அரசுக்கலைக்கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி உத்தரவின் பேரில், மாற்றுத்திறனாளி மாணவனை கல்லுாரியில் சேர்க்க வைத்து, அந்த மாணவனுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் பாடம் சொல்லி தருகின்றனர். 

பழநியை சேர்ந்த மாணவன் அருண்பிரகாஷ், வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டேன்டீ) எஸ்டேட்டில் பணிபுரியும் பெரியப்பா அழகிரியின் வீட்டில் இருந்தபடி வால்பாறையில் உள்ள கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இது குறித்து கல்லுாரி வணிகவியல்துறை துறைத்தலைவரும், பேராசிரியருமான பெரியசாமி கூறியதாவது: இம்மாணவரை பல்வேறு கல்லுாரியில் சேர்க்க மறுத்தாலும், இக்கல்லுாரி முதல்வர் அவரை அரவணைத்து, அவருக்கு தேவையான அனைத்து அரசு உதவிகளையும் பெற்று இலவசமாகவே கல்வி கற்றுத்தருகிறோம். கல்லுாரியில் வகுப்பு நடைபெறும் போது சகமாணவர்களுடன் அமர்ந்திருப்பார். வகுப்பு முடிந்த பின் இந்த மாணவனுக்கு மட்டும் தனியாக வகுப்புக்கள் நடத்தப்படும்.

அப்போது செய்கை முறையிலும், எழுத்து மூலமாகவும் விளக்கி பாடங்களை கற்றுத்தருகிறோம். எந்த ஒரு பாடம் நடத்தினாலும் அதை எளிதில் புரிந்து கொள்ளும் அற்புதத்திறன் படைத்த மாணவன் என்பதால், அவருக்கு தொடர்ந்து அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தனியாக பாடம் நடத்தி வருகின்றனர். 

சிறப்பு கவனம் எடுத்து மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பாடம் நடத்துவது எங்களுக்கும் ஒரு பெருமையாக உள்ளது. படிப்பை தவிர செஸ் விளையாட்டுப்போட்டியிலும் இந்த மாணவன் மாநில அளவில் வெற்றி பெற்று பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, பெரியசாமி கூறினார்.
மாணவன் அருண்பிரகாஷ் கூறுகையில், ''ஏழையாக பிறந்து, மாற்றுத்திறனாளியாக வளர்ந்த என்னை, உயர்கல்வி கற்க வைக்க அரும்பாடுபட்டுவரும் இக்கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் அனைவரையும் வாழ்நாளில் மறக்க மாட்டேன், இதே கல்லுாரியில் எம்.காம்.,படித்து விட்டு என்னை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது லட்சியம்,'' என்றார்.

மாற்றுத்திறனாளி மாணவனின் லட்சியம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment