Pages

Monday, October 2, 2017

பேச இயலாத கீதாவை பெற்றோருடன் சேர்த்துவைக்க உதவுங்கள்: சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள்

01.10.2017
பாகிஸ்தானில் இருந்து மீட்டு வரப்பட்ட பேச்சுத்திறனற்ற கீதாவை அவரது பெற்றோருடன் சேர்த்துவைக்க உதவுங்கள் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுடெல்லி:
இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை கடந்த 15 வருடங்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்த நிலையில், மத்திய அரசின் முயற்சியால் 26-9-2015 அன்று அவர் இந்தியா திரும்பினார்.

கீதாவின் பெற்றோர் என மூன்றுக்கும் அதிகமானவர்கள் உரிமை கொண்டாடிவரும் நிலையில் அவரது உண்மையான பெற்றோரை டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.

அதுவரை, மத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான இந்தூரில் உள்ள பேசமுடியாத, காது கேளாத சிறுமியருக்கான காப்பகத்தில் கீதாவை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கீதாவின் பெற்றோர் என்று உரிமைகோரி ஏராளமானவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தனர்.

கீதாவின் மரபணுக்களின் அடிப்படையில் சோதனை நடத்தி அவரை உண்மையான பெற்றோருடன் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக மத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான இந்தூருக்கு வந்திருந்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தூரில் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு கீதாவை வரவழைத்து சந்தித்தார். சுமார் அரை மணிநேரம் ஜாடை மொழியில் கீதாவுடன் பேசிக்கொண்டிருந்த சுஷ்மா, எப்படியாவது உன்னை பெற்றோருடன் சேர்த்து வைப்பேன் என ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் கீதாவை டெல்லிக்கு வரவழைத்து ஆசிர்வதித்தார்.

ஆனால், தனது பெற்றோர் என்று உரிமைகோரிய பலரை கீதா நிராகரித்து விட்டார். மருத்துவ ரீதியாக கீதா தங்களது மகள்தான் என்பதை நிரூபிக்க உரிமை கோரியவர்களும் தவறி விட்டனர்.

எனவே, கடந்த ஒன்பது மாதங்களாக கீதாவின் பெற்றோர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலைதான் நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்தபோது கல்வியறிவு இல்லாத சிறுமியாக இருந்த கீதா, இந்தியா வந்தபிறகு ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை கற்றுள்ளார்.

இந்நிலையில், இந்தூரில் உள்ள ஆசிரம நிர்வாகிகளிடம் கீதா தனது ஆசை ஒன்றை கடந்த ஜாடை மொழியில் தெரிவித்துள்ளார்.

நான் பிறந்து, வளர்ந்த ஊரும், எனது பெற்றோர் முகங்களும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. என்னை ரெயில் மூலம் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றால் எனது சொந்த ஊரையும், பெற்றோரையும் என்னால் அடையாளம் காட்ட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே, அவரை இந்தியாவில் உள்ள முக்கிய ஊர்களுக்கு ரெயில் மூலம் அழைத்து செல்ல ஆசிரம நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

15ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில், இந்தியாவில் இருந்து வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் சுமார் 9 வயது மதிக்கத்தக்க சிறுமி அனாதையாக அழுதபடி அமர்ந்திருந்தாள்.

மாற்றுத்திறனாளியான அந்த சிறுமியால் பேச முடியாது. செவித் திறனையும் இழந்தவள். இதனால் அவளால் தனது பெற்றோர் பற்றியோ, தனது சொந்த ஊர் பற்றியோ எதுவும் தெரிவிக்க முடியவில்லை. அவளை மீட்ட பாகிஸ்தான் போலீசார் எதி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.

முதலில் லாகூரில் உள்ள எதி அறக்கட்டளை காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அந்த சிறுமி பின்னர் கராச்சியில் உள்ள காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

அவளது பெயர் என்ன? என்று தெரியாததால், அறக்கட்டளை நிர்வாகிகள் அவளுக்கு கீதா என்று பெயர் சூட்டினார்கள். எதி காப்பகத்தில் சுமார் 14 ஆண்டுகளாக வளர்ந்து, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட கீதாவுக்கு தற்போது 26 வயது ஆகிறது.

அவர் ரெயில் மூலம் வந்தபோது பெற்றோரை விட்டுப் பிரிந்ததால், மீண்டும் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தை பார்த்தால் தனது ஊரை அடையாளம் காட்டுவார் என்ற நம்பிக்கையில் இந்தூர் ஆசிரம நிர்வாகிகள் இந்த ரெயில் பயணத்துக்கு ஏற்பாடு செய்தனர். இருப்பினும் கீதாவால் அவரது பெற்றோரை கண்டிபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில், கீதாவை பெற்றோருடன் சேர்த்துவைக்க விபரமறிந்த பொதுமக்கள் உதவிட வேண்டும் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். கீதாவின் தோளில் கைவைத்தவாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment