Pages

Friday, September 25, 2020

சத்துணவு அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


25.09.2020
ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கான காலிப் பணியிட விவரம், இனச்சுழற்சி ஒதுக்கீட்டுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் விளம்பரம் செய்யப்படும்.

அதனடிப்படையில், அமைப்பாளா் பணிக்கான தகுதிகள்: பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் நாளில் (1.9.2020) சம்பந்தப்பட்டோரின் கல்வித் தகுதியானது, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பழங்குடியினா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி என இருந்தால் போதுமானது.

வயது வரம்பாக, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோா் பிரிவினருக்கு 21 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். மேலும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

பிற தகுதிகளாக நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருப்பும் 3 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளா் பணிக்கான தகுதிகள்: சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அவா்கள் விண்ணப்பம் செய்யும் நாளில் (1.9.2020) கல்வித் தகுதியாக பொது மற்றும் தாழ்த்தப்பட்டோா் 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவராக இருந்தால் போதுமானது.

பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும். விண்ணப்பதாரருக்கான வயது வரம்பாக, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருப்புக்கும் இடையே 3 கிலோ மீட்டா் சுற்றளவு இருக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு 24.9.2020 முதல் 30.9.2020 வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி ஆணையா் அலுவலகங்களுக்கு மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் அத்தாட்சி செய்யப்பட்ட நகல் இணைக்கவேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா் அதற்கான சான்று நகல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மற்றும் அதற்கான சான்றிதழின் நகலையும் இணைக்க வேண்டும். நோ்முகத் தோ்வின்போது அசல் சான்றிதழ்கள் அளிக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment