18.05.2025
ராம்நகர்: ''உயிரிழந்த மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை,'' என, ராம்நகர் எஸ்.பி., சீனிவாஸ் கவுடா உறுதி செய்துள்ளார்.
ராம்நகர் பிடதி அருகே பத்ராபுரா கிராமத்தில் உள்ள பழங்குடியினர் காலனியில் வசித்தவர் குஷி, 14. காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 12ம் தேதி பத்ராபுரா கிராமம் வழியாக செல்லும், ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள குழியில் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. குஷியை யாரோ பலாத்காரம் செய்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இதனால் சிறுமியின் உடலில் இருந்து 32 மாதிரிகள் எடுக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
துணை முதல்வர் சிவகுமார், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி ஆகியோர், குஷியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் ராம்நகர் மாவட்ட எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று அளித்த பேட்டி:
பத்ராபுரா கிராமத்தில் உயிரிழந்த சிறுமி குஷி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று, அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். தற்போது தடய அறிவியல் ஆய்வக அறிக்கை, எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமியின் தலையின் காயத்திற்கான அறிகுறி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரியவரும். சிறுமி இறந்தது பற்றி சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். அவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கில் 10 பேரிடம் விசாரித்தோம். யாரையும் கைது செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment