ஒசூர் 12.08.2025
காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் - ஓசூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது.
மேலும், இந்தக் கூட்டமைப்பின், 40வது ஆண்டு ரூபி ஜூப்ளி விழா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தின் 15 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.
மேலும் இந்த மாநாட்டில் கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனிசாமி மற்றும் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட மாநிலத்தின் 38 மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளான காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் முழுமையாக சென்று அடையாமல் உள்ளது. எனவே அனைத்து காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
காது கேளாதோர் வாய் பேச இயலாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 500 ரூபாயாக இருந்ததை 1500 ரூபாய் என உயர்த்தி மாநில அரசு அறிவித்தது. இதனை வரவேற்றுள்ள நிலையில், இந்த உதவித்தொகை சிறு சிறு நிபந்தனைகளின் காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பயனடையும் நிலையில் அனைவரும் பயனடையும் வகையில் நிபந்தனைகளை நீக்க வேண்டும் .. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநில அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தெரிவிக்கையில்,
தற்பொழுது காது கேளாதவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை 1500 ரூபாய் யாருக்குமே சென்று அடையவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத சிறு சிறு நிபந்தனைகளால் பயனடைய இயலாத நிலை உள்ளது.
எனவே அறிவிக்கப்பட்டுள்ள 1500 ரூபாய் உதவித்தொகை அனைத்து காது கேளாதவர்க்கும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
மேலும், அண்டை மாநிலங்களில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண தனிமனிதன் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது சிரமமாக உள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளான காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் அன்றாட வாழ்க்கைக்கு கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, காது கேளாதோர் கூட்டமைப்பின் சார்பில், தமிழக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
பேட்டி : கே சுரேஷ் பாபு, சேர்மன், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment