Pages

Wednesday, August 13, 2025

பல தசாப்தங்களாக தொடரும் சோகம்: வாய் பேச முடியாமல், காது கேட்காமல் குழந்தைகள் பிறக்கும் கிராமம்!



இந்த கிராமத்தை சேர்ந்த தாய்மார்கள் தங்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறக்க வேண்டும் என விரும்பாமல், தங்களுக்கு காது கேட்கின்ற, வாய் பேசுகின்ற குழந்தை பிறந்தால் போதும் என்றே கூறுகிறார்கள்.

காஷ்மீர்: இன்றைய நவீன மருத்துவ உலகில் இதய மாற்று அறுவை சிகிச்சையையே மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடிக்கும் காலத்தில், வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத குழந்தைகள் ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து பிறக்கிறார்கள் என்றால் அதை நம்புவது சற்று கடினம் தான். ஆனால், ஒரு நூற்றாண்டாக இந்த குறைபாடு அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பது தான் நமக்கு கூடுதல் அதிர்ச்சி.

இயற்கை அழகு மிகுந்த காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் தட்காய். 'இந்தியாவின் அமைதி கிராமம்' என்றும் அழைக்கப்படும் இந்த கிராமத்தில் தான் இந்த குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுக்களுக்கு மேலாகவே இந்த பிரச்சனை உள்ளதாக கூறும் அந்த கிராமத்தை சேர்ந்த வயதானவர்கள், இது மருத்துவ பிரச்சனைகளை கடந்து கடவுளின் சாபமாக இருக்குமோ? என்று அஞ்சும் அளவுக்கு இந்த பாதிப்பின் வீரியம் தொடர்வதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.

தற்போது வரை இந்த கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் காது கேட்காத நிலையிலும், வாய் பேச முடியாமலும் இருந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த குறைபாடுடன் குழந்தை பிறக்கும் விகிதம் குறைந்து வந்தாலும், அதனை முற்றிலும் தடுக்க முடியவில்லை என வருத்தத்தோடு சொல்கிறார்கள் இப்பகுதியை சேர்ந்த தாய்மார்கள்.

இப்பகுதியை சேர்ந்த குலாம் நபி என்ற வயதான நபரிடம் இது தொடர்பாக நமது ஈடிவி பார்த் செய்தியாளர் பேசியபோது, "சுமார் 80 அல்லது 90 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகள் பிறந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். அப்போது எல்லாம் எப்போதாவது தான் இந்த மாதிரியான குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும். ஆனால் கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக இந்த குழந்தைகள் பிறப்பு விகிதம் முன்எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டு 4 பேருக்கு இதே குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்துள்ளது" என்றார்.

50 வயதை கடந்துள்ள குலாம் நபிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். இதில் 3 குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்த நிலையில், 3 குழந்தைகள் இதே குறைபாடுகளுடன் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டது.

பல மருத்துவ குழுவினர் இங்கு வந்து இந்த குறைபாடு தொடர்பாக ஆய்வு செய்கிறார்கள். சொந்தத்தில் திருமணம் செய்வதால் மரபணு கோளாறு காரணமாக இத்தகைய குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பதாக தெரிவித்து விட்டு செல்கிறார்கள். ஆனால், நாங்கள் வெளியில் திருமணம் செய்ய முயற்சித்து வருகிறோம். பலருக்கு இந்த குறைபாடு காரணமாக திருமணம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதனால் இத்தைகைய குழந்தைகள் பிறப்பதை தடுக்க முடியவில்லை என்று வருத்தத்தோடு கூறுகிறார் குலாம் நபி.

தொடர்ந்து பேசிய அவர், "நான் சில ஆண்டுகளுக்கு முன் இத்தகைய குறைபாடு உடைய எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால், அவளுக்கு பிறந்த குழந்தைகள் எந்த குறைபாடுகளும் இல்லாமல் மிக ஆரோக்கியமாக பிறந்தன. அதே நேரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் நபர்களுக்கு, குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கிறது" என்றும் கூறுகிறார்.

எனக்கு பிறந்த குழந்தைகளில் நல்ல முறையில் பிறந்த குழந்தைகளை விட, காது கேட்க முடியாத, வாய் பேச முடியாமல் பிறந்த குழந்தைகளின் புத்தி கூர்மை மிக அதிகம், மற்ற குழந்தைகளை காட்டிலும் அவர்கள் அறிவாளிகள் என்று கூறி தனது சோகம் தோய்ந்த முகத்தில் சந்தோஷத்தை வர வைக்க முயல்கிறார் குலாம் நபி.

இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் பஷரத் உசேனிடம் பேசிய போது, "இந்த கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் இருக்கிறார்கள். எனது தம்பியும் இத்தகைய குறைப்பாட்டோடு பிறந்தவர் தான். நீண்ட காலமாக இந்த பிரச்சனை உள்ளது. அடிக்கடி வந்து இது தொடர்பாக எங்களிடம் விசாரிப்பார்கள். மருத்துவர்களை பலமுறை இங்கு வந்து ஆய்வு செய்தும் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. தற்போது மருத்துவர்களை பார்த்தாலே இத்தகைய குறைபாடுடன் இருக்கும் குழந்தைகள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்" என்று கண்ணீரை துடைத்தவாறே கூறுகிறார்.

இங்குள்ள தாய்மார்கள் குழந்தை பெற்றெடுக்கும் போது தங்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறக்க வேண்டும் என விரும்பாமல், தங்களுக்கு காது கேட்கின்ற, வாய் பேசுகின்ற குழந்தை பிறந்தால் போதும் என்றே நினைப்பதாகவும் ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

மருத்துவர்கள் சொந்தங்களில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியதை, கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் பின்பற்றி வந்தாலும், இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பெண்ணோ, ஆணோ கொடுக்க மற்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் தயங்குகிறார்கள். இந்த நிலை இனிவரும் காலங்களில் முழுமையாக மாறும்பட்சத்தில், 'இந்தியாவின் அமைதி கிராமம்' என்ற பெயர் அந்த கிராமத்தை விட்டு அகலும், அதுவே தட்காய் கிராம மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது.


No comments:

Post a Comment