Pages

Monday, June 15, 2015

"மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை'

தாம்பரம்,15 June 2015


மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு சதவீதம் குறித்து சான்றிதழ் வழங்குவதற்கு முன் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் பொறுப்புணர்வோடும் ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாடு, மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்குவது குறித்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. பயிலரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு தொடர்பாக மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை டாக்டர் நீரதா சந்திரமோகன் வெளியிட, பாரத் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் வே.கனகசபை பெற்றுக் கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் சுமார் 3.48 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
பார்வைக் குறைபாடு,செவித்திறன் குறைபாடு,வாய் பேசாமை குறைபாடு,கேட்கும் திறன் குறைபாடு, மனநலக் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு ஆகியவற்றுடன் வாழும் மாற்றுத் திறனாளிகள்-சிறப்புக் குழந்தைகளுக்கு சிகிச்சை, பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் குறைபாடு சான்றிதழ் அளிப்பது குறித்த விவரங்களையும் அறிந்து கொள்வது அவசியம் என்றார் அவர்.

No comments:

Post a Comment