10.02.2026
காணாமல் போன மாற்றுத்திறனாளி, 2 மாதங்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: 2 மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய சக மாற்றுத்திறனாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (28). செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி. இவர் சென்னை புழல், லட்சுமி அம்மன் கோயில் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி சென்னை, பாடியில் உள்ள பிரபல துணிக் கடையில் வேலை செய்து வந்தார்.
மகேந்திரன் தென்காசியில் உள்ள தன்னுடைய குடும்பத்தினருடன் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் சைகை மொழி மூலம் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகேந்திரன் வீடியோ காலில் குடும்பத்தினருடன் பேசாமால் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மாமா மகன் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புழல் காவல் நிலையத்தில் உறவினர் மகேந்திரனை காணவில்லை என்று புகார் அளித்தார். மேலும் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் மற்றும் புழல் சரக காவல் உதவி கமிஷனர் சிபுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனின் செல்போன் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு மாதமாக மகேந்திரனின் செல்போன் அணைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக செல்போன் மீண்டும் இயங்கியதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் மகேந்திரன், சென்னை துணிக்கடையில் பணிபுரிந்த அவருடைய மாற்றுத்திறனாளி நண்பர்களான லாரன்ஸ் (45), வைத்தியநாதன் (45) ஆகியோர் அவ்வப்போது சந்தித்து பேசுவது வழக்கம்.
அப்போது லாரன்ஸ் மனைவி வசந்தி என்பவருக்கும், மகேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லாரன்ஸ் ஆத்திரம் அடைந்து மகேந்திரனை தீர்த்துக் கட்ட திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
பின்னர் அவருடைய நண்பர் வைத்தியநாதனையும் வரவழைத்து 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் மகேந்திரனை மர்ம உறுப்பில் எட்டி உதைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து சடலத்தை வீட்டின் அருகே உள்ள பாதாள கழிவுநீர் தொட்டியில் மூட்டை கட்டி வீசி மூடி விட்டு ஒன்றும் தெரியாது போல் இருந்து விட்டனர்.
இவ்வாறு தெரிய வந்ததை அடுத்து புழல் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டு கிடந்த மகேந்திரன் சடலத்தை தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட லாரன்ஸ், வைத்தியநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவரது மனைவி வசந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன மாற்றுத்திறனாளி, 2 மாதங்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், குற்றவாளிகள் இரண்டு பேரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று, சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சைகை மொழி பயிற்றுனர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நடித்து காண்பிக்க வைத்து வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
.png)








.jpg)


.png)