இலக்கியம் மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு
 |
| லதா ராமகிருஷ்ணன் |
இலக்கியம்
என்பது மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும், மனித வாழ்க்கை
எப்படியிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கினைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம்
விளங்க வேண்டும் என்றும், இவ்விரண்டு பிரதிபலிப்புகளும் கலந்ததே இலக்கியம்
என்றும் நம் வாசிப்பனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறோம். எழுத்தின்
வலிமை எல்லோருக்கும் தெரியும். சிறந்த நேர்மையான படைப்புகள் பல சமூகத்தில்
சீரிய மாற்றங்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கின்றன; இருந்துவருகின்றன.
உண்மையின் அடிப்படையில் உருக்கொள்வதுதான் புனைவு அல்லது கற்பனை. உலகில்,
காலங்காலமாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பு என்பது நடப்புண்மை. எனில்,
அவர்களைப் பற்றிய சித்திரிப்புகள் இலக்கியப் படைப்புகளில்
இடம்பெற்றுள்ளனவா? உள்ளது எனில் எப்படிப்பட்ட சித்தரிப்புகள்? இலக்கியப்
படைப்புகளில் பண்டைய இலக்கியந்தொட்டு சமகாலஇலக்கியம் வரை, உள்ளூர்
இலக்கியம் முதல் உலகளாவிய இலக்கியம் வரை எத்தனை கதாபாத்திரங்கள்
மாற்றுத்திறனாளிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் எவ்விதம்
சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்?
இலக்கிய ஊடக வெளிகளில் மாற்றுத்திறனாளிகள்:
மாற்றுத்திறனாளிகள் மதிப்பழிக்கப்படுவது, கேலிப்பொருளாக பாவிக்கப்படுவது
சின்னத் திரை பெரியதிரைகளில் காலங்காலமாக இருந்துவரும் போக்கு. ஏதாவதொரு
சமயத்தில்தான் இதுகுறித்து எதிர்ப்புக்குரல் ஒலிக்கிறது. தொடர்ந்த ரீதியில்
இத்தகைய போக்குகள் கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை.
பெரும்பாலான நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று, அனுதாபத்துடன்
அணுகப்படுகிறார்கள், அல்லது, அலட்சியமாக, அசிரத்தையாக அணுகப்படுகிறார் கள்.
பாதிப்புக்குள்ளானவர்களால்தான் தங்களுடைய பிரச்னைகளை சரிவர எடுத்துரைக்க
முடியும் என்ற பார்வையின் அடிப்படையில் பார்த்தோமானால் மாற்றுத்திறனாளிகள்
எத்தனைபேர் இலக்கியப்படைப்பாளிகளாய் விளங்குகிறார்கள்?
விளங்கியிருக்கிறார்கள்?
இதுபோன்ற கேள்விகளை உள்ளடக்கிய ஆழமான ஆய்வலசல் எதுவும் தமிழில் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. வரவேண்டியது அவசியம்.
கடந்த 30 வருடங்களாக நான் பங்கேற்றிருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப்
தி ப்ளைண்ட் [WELFARE FOUNDATION OF THE BLIND] என்ற ‘பார்வையற்றோர் நன்நல
அமைப்பி’ல் இந்த நோக்கில் கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக
பார்வையற்றோரின் பிரச்னைகள்/ வாழ்க்கை குறித்துப் பேசும் நூல்களையும்,
பார்வையற்றோரின் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தும் நூல்களயும் வெளியிட்டு
வருகிறோம். இதுபோல் வேறு சில தனிநபர்களும் அமைப்புகளும் முயற்சிகள்
மேற்கொண்டிருக்கக்கூடும். ஆனால், இவை போதுமா?
‘பெண் என்பதால் பெண்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டும்தான் எழுத
வேண்டுமா? பெண் என்பதாலேயே எல்லாத்தரப்புப் பெண்களுக்குமான பிரதிநிதியாய்
பெண்களின் பிரச்னைகளை, இயல்புகளை, வாழ்க்கையை துல்லியமாக எழுத்தில்
வடித்துவிட இயலுமா? என்பதான கேள்விகளைப் போலவேதான் மாற்றுத்திறனாளிகள்
விஷயத்திலும் கேள்விகள் எழுவது இயல்பு. தவிர, மாற்றுத்திறனாளிகள் என்ற
பிரிவில் பலதரப்பட்ட உடற்குறை உள்ளவர்களும் அடங்குவர்.
எப்படியிருந்தாலும், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் சீரிய
பங்களிக்கும் [உரிய வழிவாய்ப்புகள் தரப்பட்டால் அங்கத்தினர்கள் இன்னும்
சிறப்பாகப் பங்களிக்கக் கூடியவர்கள்]என்பதில் மாற்றுக்கருத்திருக்க
முடியாது. சமூக அங்கத்தினர்கள் என்ற அளவில் இலக்கியப்படைப்பு களிலும்,
ஒளி-ஒலி ஊடகங்களிலும் அவர்களின் பங்கேற்பும் சித்திரிப்பும் எத்தகையதாய்
விளங்குகிறது?
படைப்புவெளியில் பார்வையற்றோர்
இலக்கியம் நமக்கு எதிராக இயங்குகிறதா? [IS LITERATURE AGAINST US?] என்ற
அகல்விரிவான கட்டுரையொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. டாக்டர் கென்னெத்
ஜெர்நிகன் என்ற பார்வையற்றவர் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு
எழுதியிருக்கும் அந்தக் கட்டுரை அழுத்தமான ஆதாரங்களுடன் ‘இலக்கியப்
படைப்புகள் பார்வையற்றோரைப் பார்க்கும் ‘அறியாமை நிரம்பிய பாரபட்சப்
பார்வையை எடுத்துரைத்திருக்கிறது. பார்வையின்மை என்பது தண்டனையாகவும்,
தெய்வம் தந்த வரமாகும்படியான தூய பண்பாகவும், பார்வைக்குறைபாடுடையவர்
பரிதாபத்திற்குரியவர், கயவர், ஏமாற்றுக்காரர், திருமண வாழ்க்கையில்
திருப்திகரமாக ஈடுபட முடியாதவர், தனித்ஹ்டியங்க இயலாதவர் என பலவிதமான
எதிர்மறைச் சித்திரிப்புகளாய் காலங்காலமாய் இலக்கியப்படைப்புகளில்
தரப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். பார்வையிழப்பிற் குப்பின்
‘பாரடைஸ் லாஸ்ட்’[இழந்த சொர்க்கம்] என்ற அமர காவியத்தை எழுதிய மில்ட்டன்கூட
சமூகத்தில் பார்வையற்றோர் குறித்து நிலவும் எதிர்மறைப் பார்வைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டவராய் அத்தகைய எதிர்மறைக் கருத்துகளையே, அதாவது
பார்வையின்மை இறப்பைவிடக் கொடியது, பார்வையற்றவர் சபிக்கப்பட்டவர் என்ற
ரீதியில், சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டி யுள்ளார். நம்முடைய உண்மைநிலையை
உலகுக்கு எடுத்துச்சொல்ல நாம் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும் என்று
கூறியுள்ளார். கண்டிப்பாகத் தமிழில் மொழி பெயர்க் கப்படவேண்டிய இந்தக்
கட்டுரை நம் கையில் கிடைப்பதற்கே இருபதாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.
கணினி, கைபேசி ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மூலம் இன்று பார்வைக்
குறைபாடுடைய மனிதர்களால் இதுவரை படிக்கக் கிடைக்காமலிருந்த பல புனைவு,
அ-புனைவுப் பிரதிகளை அவர்களால் படிக்கமுடிகிறது.
ஆனால், இந்த இருபது, முப்பது ஆண்டுகளில் படைப்பு வெளியில்
படைப்பாளிகளாகவும், பாத்திரங்களாகவும் இடம்பெறுதல் அளவிலும் தரத்திலும்
[quantity-wise and quality-wise]அதிகமாகியிருக்கிறதா என்றால் இல்லை யென்றே
சொல்லவேண்டும்.
காலிழந்தவர் கதாநாயகியாகக்கூடாதா?
முப்பது வருடங்களுக்குமேல் இருக்கும். விபத்தில் தனது ஒரு காலை இழந்து
விட்ட பதினாறுவயதுப் பெண் சுதா சந்திரன் தன் விடாமுயற்சியால் நடுவில்
நின்று போன நாட்டியப்பயிற்சியை செயற்கைக்காலுடன் நிறைவுசெய்து ‘மயூரி’
படத்தில் நடித்து பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த சமயம். அப்போதைய பிரபல
எழுத்தாளர் பாலகுமாரன் ஒருவருடைய தொடர்கதையின் கதாநாயகனுக்கு
செயற்கைக்கால். அவன் மூலம் வாசகர்களுக்கு அறிவுரை தருவதாய் அந்த
எழுத்தாளர், ‘நம்முடைய உடற்குறையை நாம் மறுதலிக்கலாகாது. இயலாத
விஷயத்திற்கு முயற்சி செய்யலாகாது. திரைப்படங்களில் நடித்தால் ஒன்றிரண்டு
தடவைகள் பரிதாபத்திற் காய் பார்ப்பார்கள். பிறகு...?’ என்றெல்லாம்
கேள்விகளை அடுக்கிக்கொண்டே போய் ‘மயூரி ஒரு முட்டாள்’ என்று
‘மனிதநேய’த்தோடு முடித்திருந்தார். அந்த சுதா சந்திரன் இன்றளவும்
நடித்துக்கொண்டிருக்கிறார்.
மாறாக, ‘டப்பிங்’ அதாவது இரவல் குரல் கொடுத்தல் என்ற, இன்று
சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் பெருமளவு பயன்படுத்தபட்டுவரும்
உத்தியைப் பயன் படுத்தி காதுகேளாத, வாய்பேசாத பெண்ணொருத்தியைத் தங்கள்
படத்தில் இயல்பான கதாநாயகியாக நாடோடி படத்தில் நடிக்கச்செய்த முயற்சி
பாராட்டிற்குரியது. இதுபோன்ற முயற்சிகள் ஒளி-ஒலி ஊடகங்களில் அதிகம்
இடம்பெறவேண்டியது அவசியம். அதற்கு, சமூகத்திலும், குறிப்பாக
படைப்பாளிகளிடம் மாற்றுத் திறனாளிகள் குறித்தபுரிதலும், அவர்களாலும்
இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள இயலும் என்ற புரிதலும் அதிகமாக வேண்டும்.
வேண்டுவது அனுதாபமல்ல: அங்கீகாரமே
பெண்கவிஞர் என்ற ஒற்றைச் சொற்பிரயோகத்தில் இலக்கியம் தெரிந்த தெரியாத,
கவிதை தெரிந்த தெரியாத, நவீன கவிதை தெரிந்த தெரியாத ஆண்களெல்லோருமே
படைப்புத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பாய்வு செய்யும் தகுதியுடையவர்
களாகிவிடுவதுபோல், வெகு சுலபமாய் தங்களை புரவலர் நிலையில் ஆலோசகர்
நிலையில் மேலடுக்கில் நிலைபெறச்செய்து கொண்டு விடுவது போலவே உடற்
குறையுடையவர்கள் – அவர்கள் எழுத் தாளர்களோ, வாசகர்களோ – உடற்குறையுள்ள
படைப்பாளிகளை அனுதாபத் தோடு பார்ப்பதும், அவர்களுக்கு அறிவுரை கூற
முற்படுவதும் தொடர்ந்து நடந்துவரும் ஒன்று.
ஏதேனும் உடற்குறையுடையவர்கள் படைபாக்கத்தில் ஈடுபட்டால் உடனே அவருக்கு
ஆலோசனை கூறவும் அறிவுரை தரவும் பலர் முன் வந்துவிடுகிறார்கள். ‘பார்வைக்குறை
உடையவர்கள் பார்வையின்மை, அது சார்ந்த பிரச்னைகளையே முன்னுரிமைப்படுத்தி
எழுத வேண்டும். ஏனெனில், அவற்றையெல்லாம் அத்தனை நம்பகத்தன்மையோடு
மற்றவர்களால் எழுத இயலாதல் லவா?” என்று தங்கள் ஆலோசனைகளுக்கு நியாயம்
கற்பிப்பார்கள். பார்க்கமுடியாது, பேச முடியாது, கேட்க முடியாது என்ற
நிலையிலும் கல்வி கற்று தேர்ச்சி பெற்று பார்வையற் றவர்களின்
நலவாழ்வுக்காகப் பெரும்பங்காற்றிய ஹெலன் கெல்லருக்கும் இந்த அனுபவம் உண்டு.
அவர் தன்னுடைய சுயசரிதையை, தான் பட்ட துன்பங்களை எழுதியபோது அவருடைய
எழுத்தைக் கொண்டாடிய சமூகம், சமூகத்தின் ஓர் அங்கத்தினராய் அவர் சமூக
அவலங்கள் குறித்து எழுதியபோது, அவை குறித்த தனது அக்கறையான பார்வைகளை,
கருத்துகளை முன்வைத்தபோது அந்த முயற்சியை எளிதாகப் புறந்தள்ளிவிட்டதாம்.
REBEL LIVES என்ற வரிசையில் வெளியிடப்பட்டுள்ள ‘ஹெலென் கெல்லர் நூல் இதை
விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது என்று விவரம் கிடைத்தது.
......2