FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, May 16, 2014

மாற்றுத்திறனாளிகளும் மருத்துவச் சான்றிதழ்களும்...

கோவை மாவட்டம் அன்னனூர் ஒன்றியம் ‍பொத்தியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயின் மகளான பானுசுந்தரி(24) என்ற கல்லூரி மாணவி 2/5/2012 அன்று என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயர் கல்விக்கு மற்றும் வங்கித் தேர்வுகள் எழுதுவதற்காக மருத்துவக் குழுவின் மருத்துவச் சான்றிதழ் வேண்டும், இதனை எவ்வாறு பெறுவது என்று கேட்டார். அவரை நேரில் சந்தித்து, மருத்துவக் குழுவின் மருத்துவச் சான்றிதழ் நகல் ஒன்றையும், அதனை எப்படி விண்ணப்பித்துப் பெறுவது என்பதையும் விளக்கமாகக் கூறினேன்.
***
எத்தனை வகை மருத்துவச் சான்றிதழ்கள் . . .
இருபது ஆண்டுகளுக்கு முன் நான் திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எலும்பு
முறிவு மருத்துவர் முருகேசன் அவர்களிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்றது நினைவுக்கு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு மாலை நேரத்தில் வருகை தரும் அந்த மருத்துவர் என்னை நன்கு பரிசோதனை செய்து 65சதவிகிதம் ஊனம் என்று சான்றிதழ் அளித்தார். அந்தச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டே எனது உய்ர்கல்விக்கான இடம் அளிக்கப்பட்டது. பின்னர் அதே சான்றிதழின் நகல் ஒன்றினை இணைத்து எனக்கு மாவட்ட ஆட்சித் தலைவரால் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. அந்தச் சான்றிதழின் நகலை பயன்படுத்தி அடுத்த பத்து ஆண்டுகளாக அரசின் அனைத்து சலுகைகளையும் என்னால் பெற முடிந்தது.
மருத்துவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையின் நிலை.....
மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக மருத்துவச் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. 1. உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, உயர்கல்விக்கு அல்லது தொழிற் கல்விக்குத் தகுதியுடையவர் என்பதற்கான சான்றிதழ். (அந்த குறிப்பிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்)2. வேலை வாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளுக்கு மருத்துவச் சான்றிதழ். இந்த இரண்டு சான்றிதழ்களும் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உள்ள மருத்துவர் குழுவினால் வழங்கப்பட வேண்டும் (Medical Board). இந்தச் சான்றிதழ் குறிப்பிட்ட படிவத்தில் வாங்க வேண்டும்.
இந்தச் சான்றிதழ் 1 ஆண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லும் என்று மருத்துவ அதிகாரி குறிப்பிடுவார். 3. கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்கு மருத்துவச் சான்றிதழ் வேண்டும். 4. இரயிலில் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்ய மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும். இது ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். 5. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் சேரும் பொழுது இந்த மாற்றுத்திறனாளியின் உடல், புலன் சார்ந்த குறைபாடுகள் இவர் ஆற்றவிருக்கும் பணிகளுக்கு இடையூராக இருக்காது என்ற "தகுதிச்சான்று". (Fitness Certificate) 6. மாற்றியமைக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக மருத்துவக் குழுவின் மருத்துவச் சான்றிதழ். 7. விமானங்களில் ஐம்பது சதவிகித கட்டணத்தில் பயணம் செய்ய தேவையான மருத்துவச் சான்றிதழ்(இதற்கான படிவம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதனைப் பயன்படுத்தி வருபவர்கள் பற்றியும் தகவல் இல்லை.
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையிடமும் இதற்கான தகவல்கள் இல்லை. அவர்களின் இணைய தளங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் இல்லை. ஆனால் இந்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகைகளில் இவ்வகையான ஒரு சலுகை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது)இவ்வாறு பல்வேறு வகையானன மருத்துவச் சான்றிதழ்களை பெற வேண்டிய சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
அடையாள அட்டையில் மருத்துவச் சான்றிதழ்
 மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையில் மூன்று மருத்துவர்கள் கையெழுத்திட்ட ஊனத்தின் தன்மை குறித்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இச் சான்றிதழ் அரசு வேலை வாய்ப்புக்கோ, உயர் கல்விக்கோ ஏற்புடையது அல்ல. பல்வேறு வகையான மருத்துவச் சான்றிதழ்களைப் பெற மருத்துவ மனையை அணுகும் பொழுது, "அடையாள அட்டையைக் கொண்டு வந்தால்தான் சான்று அளிக்கப்படும்" என்ற பதிலே கிடைக்கிறது. அவ்வாறு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு சென்றால் மருத்துவக் குழு "எலும்பு முறிவு பிரிவுக்குச் சென்று மருத்துவரைப் பார்த்து சான்றிதழ் பெற்று வா" என்று கூறுகின்றது. (கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவக் குழுவின் அலுவலகத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 அல்லது 300 மீட்டர்கள் தள்ளி எலும்பு முறிவுப் பிரிவு அமைந்திருக்கிறது. பல கைகால் இயக்கக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டு நடந்து, தவழ்ந்து, உருண்டு சென்று சான்றிதழ் பெற்று வருகின்றனர்.
மருத்துவக் குழுவில் ஒரு எலும்பு முறிவு மருத்துவர் இடம் பெற்றிருந்தால் இந்தப் பிரச்சனை பெருமளவில் குறைக்கப்படும்). எலும்பு முறிவு மருத்துவரோ அடையாள அட்டையில் குறிக்கப்பட்டிருக்கும் ஊனத்தின் சதவிகிதத்தை அப்படியே எழுதிக் கையெழுத்திட்டுத் தருகிறார். அடையாள அட்டை வழங்கப்பட்ட காலத்திற்குப் பின் ஊனத்தின் தன்மை கூடியிருக்கிறதா? குறைந்திருக்கிறதா? என்பதை முறையாக சோதித்து அறிவதில்லை. இது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த பாரதூரமான விளைவுகளை உருவாக்குகிறது.
மின்னணு அடையாள அட்டையே தீர்வு
 இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை ஒரு ஏற்பு ஆவணமாக இருக்க வேண்டும. தேசிய அடையாள அட்டையானது ஆங்கிலத்தில் நிரப்பப்பட வேண்டும். தற்பொழுது ஊனத்தின் தன்மை குறித்த விபரங்களுக்கு படிவம் நான்கு (Form IV) நிரப்பபட்டு தனியாக வழங்கப்படுகிறது. (1984ஆம் ஆண்டு அடையாள அட்டை(கறுப்பு நிற அட்டை) தனியாகவும் மருத்துவச் சான்றிதழ் தனியாகவும் இருந்தது. அடையாள அட்டையின் கடைசி பக்கத்தில் மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்கும். பின்னர் 1990களில் வழங்கப்பட்ட அட்டையில் மருத்துவர் ஒருவர் கையொப்பத்துடன் அடையாள அட்டை வழங்கப்ட்டது(வெள்ளை நிற அட்டை) 1995ஆம் ஆண்டிலிருந்து மூன்று மருத்துவர்கள் கையொப்பமிட்ட அடையாள அட்டை (நீல நிற அட்டை) வழங்கப்பட்டது. தற்பொழுது 2012ல் எனக்கு வழங்கப்பட்ட அட்டையில் ஒரே ஒரு மருத்துவர் கையெழுத்திட்ட மருத்துவச் சான்றிதழ் தனியாக வழங்கப்பட்டுள்ளது. அதை நான் அடையாள அட்டையுடன் இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைத்தானைய்யா 1984ல செஞ்சுக்கிட்டிருந்தீங்க. மறுபடியும் அடையாள அட்டை அதே ஃபேஷனுக்கு கொண்டு வந்துட்டீங்க.)
மின்னணு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் அதில் பதினாறு இலக்க எண்களுடன் கூடிய நிரந்தர தேசிய அடையாள எண் வழங்கப்பட வேண்டும். அனைத்து விதமான சலுகைகளையும், உரிமைகளையும் பெற அந்த அடையாள எண் பயன்படும். மாறாத தன்மை உடைய ஊனம் உள்ளவர்களுக்கு நிரந்தரமான அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத் தக்க அனைத்து விபரங்களும் அடங்கிய ஒரே ஒரு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். மருத்துவச் சான்றிதழ் கோரி இணையம் வழியாக விண்ணப்பித்து சில நாட்களுக்குள் நேரில் சென்று மருத்துவ பரிசோதனைகளை முடித்து உடனடியாகப் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மின்னணு அடையாள அட்டையும் அடையாள எண்ணும் வழங்கப்படுமானால் அதன் உதவியோடு அனைத்து உதவித் தொகைகளை பெறவும், போட்டித் தேர்வுகளுக்கு கட்டணங்கள் இன்றி விண்ணப்பிக்கவும், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் மாற்றுத்திறனாளிகளால் இயலும். (ரயில் டிக்கெட்டுகளை இணைய வழிப் பதிவு மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது).
மேலும் மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்கள் வழங்க வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுமானால் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று அங்குள்ள அரசு மருத்துவரை அணுகி தனக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள இயலும். இது இன்னும் விரிவடைந்து தனியார் துறை மருத்துவர்களும் சான்றளிக்கலாம் என்ற நிலை உருவானால் ஒவ்வொரு கிராமத்திலும் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள இயலும். தனியார் மருத்துவமனை என்றால் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். அந்தக் கட்டணத்தை அரசே செலுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவலாம்.
***
பானுசுந்தரி 7/5/2012 அன்று மருத்துவக் குழுவின் நேர்முக விசாரணைக்கு அழைக்கப்பட்டார், எலும்பு முறிவு மருத்துவரைச் சென்று பார்த்து சான்றிதழ் வாங்கி வரும்படி அறிவுறுத்தப்பட்டார். எலும்பு முறிவு மருத்துவரைப் பார்த்து சான்றிதழ் வாங்கும் முன்பாக 12மணிக்கெல்லாம் மருத்துவக் குழு தனது பணிகளை முடித்துக் கொண்டு கலைந்தது. 14/5/2012 அன்று காலை அவர் மீண்டும் மருத்துவக் குழுவின் முன் வருகை தந்தார். அன்று அவர் எலும்பு முறிவு மருத்துவரிடம் பெற்ற சான்றிழைப் பார்த்துவிட்டு நீங்கள் மீண்டும் நரம்பியல் மருத்துவரைச் சென்று பார்த்து சான்றிதழ் வாங்கி வாருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டார். அன்று நரம்பியல் மருத்துவரைப் பார்க்க இயலவில்லை. 21/5/2012 அன்று நரம்பியல் மருத்துவரைச் சந்தித்து அவரிடமும் சான்றிதழ் பெற்றுவிட்டார். அவரைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன், மருத்துவக் குழுவின் மருத்துவச் சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா என்று. "இன்றும் மருத்துவக் குழுவின் நேரம் (10மணி முதல் 12மணிவரை) முடிந்துவிட்டது. எதிர்வரும் 28/5/2012 அன்று மருத்துவக் குழுவின் மருத்துவச் சான்றிதழ் கிடைத்துவிடும்" என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். ஏதோ ஒரு நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.

No comments:

Post a Comment