FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, November 21, 2014

குறைபாடு இருந்தாலும் குழந்தைகளே

திருச்சி, கே.கே. நகரில் கடந்த 13 ஆண்டுகளாகப் பள்ளி நடத்தி வருகிறார் கீதா. இது ஊருக்கு ஊர் நடப்பதுதானே என்று யோசிக்கலாம். ஆனால் கீதாவின் பள்ளியில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளும், ஆட்டிசம் என்னும் குறைபாடு கொண்ட குழந்தைகளும் படிக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே சிறப்பாகப் பயிற்சியளித்து, அவர்களும் மற்றக் குழந்தைகள் போலப் பொதுப்பள்ளியில் படிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி வருவதில்தான் தனித்து நிற்கிறார் கீதா.

அப்பா, அம்மா, பள்ளி, கல்லூரி என மிக இயல்பான வாழ்க்கைதான் கீதாவுக்கும். ஆனால் கல்லூரியில் காலடி எடுத்துவைத்த போதுதான் இவரது பயணம், சமூகத்துக்கான பாதையில் மாறியது. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கீதாவின் ஆசை. மகளை வெளியூருக்கு அனுப்பப் பெற்றவர்கள் யோசித்ததால், உள்ளூரிலேயே படிக்க வேண்டிய கட்டாயம். சேவை சார்ந்தே படிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக எம்.ஆர்.எஸ்சி எனப்படும் மூளைத்திறனில் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். அந்த வகைக் குறைபாடுகள் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத 90களில், படிப்புக்காகவும் பயிற்சிக்காகவும் ஹாலந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்றார். படிப்பும், பயிற்சியும் முடிந்ததும் கிராமப்புறப் பள்ளியொன்றில் சேர்ந்தார். பிறகு அவர் படித்த கல்லூரியிலேயே பேராசிரியர் பணி கிடைத்தபோது, சேவையின் வாசல் விரிந்தது.

“நான் படித்த ஹோலிகிராஸ் கல்லூரியிலேயே பணியாற்றும் வாய்ப்பு ஒரு வகை மகிழ்ச்சி என்றால், காது கேளாத குழந்தைகளுடன் பணியாற்றுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. பத்து ஆண்டுகள் நீடித்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு, செவித்திறனில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியைத் தொடங்கத் தீர்மானித்தேன். நான் வேலைக்குச் செல்வதற்கு முட்டுக்கட்டை போடாத என் புகுந்த வீடு, என் இந்த எண்ணத்துக்கும் துணை நின்றது. குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதற்காகவே சிறப்பு பி.எட். முடித்தேன். குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது சவால் நிறைந்தது. அந்தச் சவாலை உறுதியுடன் சந்திப்பதற்காக என்னை தகுதிப்படுத்திக் கொண்டேன். இங்குப் பணிபுரியும் ஆசிரியர்களும் பயிற்சி பெற்றவர்கள்தான்” என்று பள்ளி தொடங்கிய நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் கீதா.

பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு

“பொதுப் பள்ளிகளைப் போல முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை இங்கே நியமிக்க முடியாது. படிக்கிற மாணவர்கள், சிறப்புக் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கான கற்றலும் சிறப்பாகத்தானே இருக்க வேண்டும். அதனால் கற்றல் முறைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் பாடங்கள் கற்றுத் தரப்படும்.

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கும் பள்ளி துவங்கியிருக்கிறோம். இவர்களுக்கு ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்றவற்றைத் தொடர்ச்சியாகத் தருகிறோம். இதற்காகவே எங்கள் பள்ளியில் எப்போதும் இரண்டு பயிற்சியாளர்கள் இருப்பார்கள்” என்று சொல்லும் கீதா, குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதில் பெற்றோர்களுக்கும் பங்கு இருக்கிறது என்கிறார்.

மனநிலை மாறவேண்டும்

“காதுகேளாத குழந்தைகளை முடிந்த வரை சீக்கிரமாகவே சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது நல்லது. அப்போதுதான் அவர்களுடைய குறைபாட்டின் அளவு கண்டறியப்பட்டு அதற்கேற்பக் காது கருவிகள் பொருத்தப்படும். பொதுவாக மூன்று வயதுக்குள் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு உதட்டசைவை வைத்தே பேசுவதைப் புரிந்துகொள்ளப் பயிற்சியளிப்பது சுலபம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளையும் கூடியவிரைவில் பள்ளியில் சேர்ப்பது, அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது. பொதுவாகத் தங்கள் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடு மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பலர், குழந்தைகளைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்கத் தயங்குவர். இன்னும் சிலர் ஊரார் பேச்சுக்குப் பயந்து குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அழைத்துவரவும் யோசிப்பார்கள். இந்த மனநிலையைத்தான் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்கிறார் கீதா.

குறைபாடுள்ள குழந்தைகளுக்கான இவர்களுடைய பாடத்திட்டம், ‘தனிப்பட்ட கல்வித் திட்டம்’. இதில் ஒவ்வொரு குழந்தையின் திறனுக்கும் ஏற்ப இவர்களே ஒரு இலக்கை நிர்ணயித்துவிடுகிறார்கள். அந்த இலக்கை அடைவதற்காகக் குழந்தையுடன் சேர்த்துப் பெற்றோருக்கும் பயிற்சியளிக்கிறார்கள். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாக இருந்தால், அவர்களை ஒரு இடத்தில் சரியாக உட்கார வைப்பதில் இருந்து துவங்குகிறது இவர்கள் பயிற்சி. பிறகு கண்ணோடு கண் பார்த்தல், உருவங்களைக் கண்டறிதல், வடிவங்களை இனங்காணுதல் என்று படிப்படியாகச் சொல்லித் தருகிறார்கள். இதை வீட்டிலும் தொடரச் செய்கிறார்கள். அப்படியும் குழந்தையால் இலக்கை அடைய முடியவில்லை என்றால், அதற்கான புறக்காரணிகளைக் கண்டறிந்து மீண்டும் முயற்சிக்கிறார்கள். இந்த அணுகுமுறை நம்பிக்கை தருவதாக இருக்கிறது.தோற்றத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்குத் தீர்வு தேடவும் வழி இருக்கிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தைகளை இனங்கண்டறிவதுதான் சவால் நிறைந்தது. குழந்தைநல மருத்துவர்களும், மனநல மருத்துவர்களும் தான் நடத்தும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியையும், பிரவாக் ஆட்டிசம் குழந்தைகளுக்கான இடைக்காலப் பள்ளியையும் பரிந்துரைப்பதாகச் சொல்கிறார் கீதா.

“நேற்றுதான் கல்லூரி முடித்துவிட்டு, பணியில் சேர்ந்த மாதிரி இருக்கிறது. அதற்குள் 24 ஆண்டுகள் கடந்துவிட்டதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. இந்தப் பள்ளிகள் தவிர, கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, மாலை நேரத்தில் தனியாகப் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். எங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகள், இங்கே தரப்படும் பயிற்சியின் விளைவாகப் பொதுப் பள்ளியில் பயிலும் தகுதியை அடையவேண்டும். அதுதான் எங்கள் இலக்கு. காரணம்

அந்தக் குழந்தைகளும் திறமைசாலிகள்தான். நாம் அவர்களுக்குத் தர வேண்டியது எல்லாம் போதுமான அரவணைப்பும், வழிகாட்டலும்தான்” என்று அனுபவத்தையே வார்த்தைகளாகச் சொல்கிறார் கீதா. சேவைக்காக இவர் வாங்கிய விருதுகளைவிட, தன் பள்ளிக் குழந்தைகளின் முகத்தில் தெரியும் மலர்ச்சிதான் மிகப்பெரிய விருது என்கிறார். குழந்தைகளை மிஞ்சிய தீர்ப்பு இருக்கமுடியுமா என்ன?

No comments:

Post a Comment