FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, March 29, 2019

`கூடப்பிறந்தவங்க 6 பேருக்கும் காது கேட்காது, பேச முடியாது!’ - 9 பேரைக் காப்பாற்றும் தனலட்சுமி


``சின்ன வீடுங்கிறதால, வீட்ல 9 பேர் படுக்கிறதுக்கு இடம் இருக்காது. இரவு நேரத்துல எப்பவும் 5 பேர் உள்ளேயும் 4 பேர் வெளியேயும்தான் படுத்துத் தூங்குவோம். மழை பெய்யுறப்ப வீட்டுக்குள்ள படுக்க இடம் இருக்காது. உட்கார்ந்துக்கிட்டே வீட்டு சுவர்ல சாஞ்சிக்கிட்டே தூங்கிருவோம். இப்ப, சாஞ்சிக்கிட்டு தூங்குகிறதுக்குக்கூட சுவர் இல்லை. கஜா புயலுக்கு அப்புறம் எங்கள் கூரை வீடு பாதிக்கும்மேல் சேதமடைஞ்சுப்போச்சு.’’

``அன்னைக்கு நான் வீட்டுவேலைக்குப் போயிட்டேன். வீட்டுக்குள்ள அம்மா, நெஞ்சுவலியால ரொம்ப நேரம் துடிச்சிருக்காங்க. மூணு அக்காக்களும் ரெண்டு அண்ணன்களும் வெளியிலதான் இருந்திருக்காங்க. அவங்க யாருக்குமே காது கேட்காதுங்கிறதால, அம்மாவோட அலறல் சத்தம் அவங்களுக்குக் கேட்கலை. ரொம்ப நேரம் போராடின அம்மா, வேற வழி இல்லாம பக்கத்துல இருந்த மண்பானையை வேகமா தள்ளிவிட்டு உடைச்சிருச்சு. பானை உடைஞ்ச சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரங்க ஓடி வந்த பிறகுதான், விஷயமே வெளியே இருந்த அவங்களுக்குத் தெரிஞ்சுது. அப்புறம் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப்போய்க் காப்பாத்திட்டோம்’’ என்று கூறும் தனலட்சுமி, அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. தனி ஒரு மனுஷியாக அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற போராடிவருகிறார்.

``எங்க குடும்பத்துல அம்மா, அப்பா, என்னோடு சேர்த்து மொத்தம் 9 பேர். நாலு அக்கா, ரெண்டு அண்ணனுங்க. நான்தான் எல்லாருக்கும் கடைக்குட்டி. என்னைத் தவிர 6 பேருக்கும் பொறந்ததிலிருந்தே காது கேட்காது, வாய் பேச முடியாது. வாய் அசைவுகளை வைத்து நாம என்ன பேசுறோம்னு அவங்க புரிஞ்சுக்குவாங்க’’ என்று அவர்களை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

``ரொம்ப வருஷமா அப்பா செருப்பு தைச்சுதான் எங்களைக் காப்பாற்றிக்கிட்டு இருந்தார். அம்மா வீட்டுவேலைகளைப் பார்க்கும். 15 வருஷத்துக்கு முன்னாடி, அப்பா நோய் வந்து படுத்துட்டார்.

அப்பாவுக்கு அப்புறம் அம்மாதான் வீட்டுவேலை செஞ்சு, ரொம்பவே கஷ்டப்பட்டு எங்க எல்லோரையும் காப்பாத்துச்சு. இப்ப அம்மாவுக்கும் உடம்பு முடியலை. அம்மாவும் முடங்கினதுக்கு அப்புறம், நான் வீட்டுவேலைக்குப் போகத் தொடங்கி 10 வருஷம் ஆச்சு. அதுல கிடைக்கும் வருமானத்தை வச்சு குடும்பத்தைப் பார்த்துக்கிறேன்’’ என்ற தனலட்சுமியின் கண்களில் நீர் ஏதும் வரவில்லை. வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிளிர்கிறது.

புதுக்கோட்டை காந்திநகரில் இருக்கிறது இவர்களின் கூரை வீடு. மூன்று பேர் மட்டுமே தங்குவதற்கு வசதிகொண்ட அந்த வீட்டில்தான், தன் தாய், தந்தை மற்றும் தன் 6 மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுடன் வசிக்கிறார் தனலட்சுமி. கஜா புயலுக்குப் பிறகு, இருந்த குடிசைவீடும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், செய்வதறியாது பரிதவித்துவருகிறார்.

தனலட்சுமியிடம் தொடர்ந்து பேசினோம்.

``ரெண்டு அக்காவும் ஆரம்பத்துல கொஞ்ச நாள் வீட்டுவேலைக்குப் போனாங்க. பக்கத்துல வந்து வேலை சொல்ல வேண்டி இருக்கிறதால், அந்த வீட்டு முதலாளியம்மா ரெண்டு பேரையும் விரட்டிட்டாங்க. அக்காக்களுக்கு வேற வேலை தெரியாது. எனக்கு விவரம் தெரியும் வரைக்கும் அக்காக்கள் தெருவில் போய் பிச்சையெடுத்து வருவாங்க. ஒரு அண்ணனுக்கு, சரியா கண்ணு தெரியாது. இன்னொரு அண்ணனுக்கு, கிட்னிப் பிரச்னை. அண்ணனுங்க, சின்னச் சின்ன வேலை பார்ப்பாங்க. அந்தக் காசு, அம்மா வீட்டுவேலைக்குப் போய் சம்பாதிக்கிற காசு இதையெல்லாம் வச்சுதான் ரொம்ப வருஷமா குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நான் 9-ம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். அந்த வருஷம்தான் எங்கள் குடும்பத்துக்கு அடுத்த அடுத்த அடி. அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப்போயிருச்சு. வேலைக்குப் போறத நிறுத்திருச்சு. ஒரு அண்ணனுக்கு கிட்னி செயலிழந்துபோச்சு. அடுத்து குடல்வால்வு ஆபரேஷன்.

அடுத்த மாசமே ரெண்டாவது அண்ணனுக்கும் குடல்வால்வு ஆபரேஷன். ரெண்டு பேராலையும் எந்த வேலையும் செய்ய முடியாது. அம்மாவுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாமப்போச்சு. அண்ணன், அக்காக்களுக்கு வேலை இல்லை. குடும்பத்தைக் காப்பத்தணும். என்ன செய்யுறுதுன்னே தெரியலை. என்னுடைய படிப்பை நிறுத்தியாச்சு. அம்மா வேலை செஞ்சிக்கிட்டு இருந்த இடத்துல வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். 10 வருஷம் ஆகிப்போச்சு. இப்போ, அக்காக்கள் யாரையும் பிச்சை எடுக்க விடுறதில்லை. அண்ணன்களையும் கஷ்டப்படுத்துறதில்லை. பாத்திரம் கழுவுறதால கிடைக்கும் வருமானத்தை வச்சு, குடும்பத்தைப் பார்த்துக்கிறேன். 6 பேர்ல பஞ்சவர்ணத்துக்கு மட்டும்தான் கல்யாணம் ஆகியிருக்கு. என்னையும் சின்ன அண்ணனையும் தவிர்த்து மத்தவங்க எல்லாருக்கும் கல்யாண வயசு தாண்டிடுச்சு. இன்னும் கல்யாணம் ஆகலை.

ஒரு நாள் மூத்த அண்ணன் அவருடைய பாஷையில் `எனக்கு, கல்யாண வயசு தாண்டிடுச்சு’னு சொல்லிக்காட்டுச்சு. மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப்போச்சு. ஊமையா இருந்தாலும், அவங்களுக்குள்ளேயும் இப்படிப்பட்ட ஆசை இருக்கும்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

எனக்கும் கல்யாண வயசு ஆகிப்போச்சுன்னு வீட்ல சொல்லிப் புலம்புறாங்க. உங்களையெல்லாம் விட்டுட்டு, கல்யாணம் பண்ணிக்கிட்டு அடுத்த வீட்டுக்குப் போறதைப் பத்தி இப்போதைக்கு என்னால நினைக்க முடியலை. `என் கடமைகளை முடிச்சிட்டு, அப்புறம் அதைப்பத்தி யோசிப்போம்’ணு அம்மாகிட்ட சொல்லிட்டேன்.

மூணு பொண்ணுங்களுக்கு கல்யாண வயசு தாண்டிருச்சு. எனக்காவது வயசு இருக்கும்போதே கல்யாணம் பண்ணிவைக்கணும்னு அம்மாவுக்கு ரொம்ப ஆசை. அப்படி நான் வேற வீட்டுக்குப் போயிட்டா, இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டதுக்கு அர்த்தம் இல்லாமல்போயிடும். `கல்யாணப் பேச்சை இப்போதைக்குப் பேசக் கூடாது’னு அம்மாகிட்ட கறாரா சொல்லிட்டேன்.

அப்படியே, என்னைப் புரிஞ்சிக்கிட்டு என்னோடு சேர்ந்து என் குடும்பத்தையும் பார்த்துக்கிற கணவர் கிடைச்சா, கட்டாயம் அவரை கல்யாணம் செஞ்சுக்குவேன். அது நடக்குமானு தெரியலை. இப்போதைக்கு 5 பேர்ல ஒருத்தருக்காவது சீக்கிரமா கல்யாணம் முடிக்கணும்.

சின்ன வீடுங்கிறதால, வீட்ல 9 பேர் படுக்கிறதுக்கு இடம் இருக்காது. இரவு நேரத்துல எப்பவும் 5 பேர் உள்ளேயும், 4 பேர் வெளியேயும்தான் படுத்துத் தூங்குவோம். மழை பெய்யுறப்ப வீட்டுக்குள்ள படுக்க இடம் இருக்காது. உட்கார்ந்துக்கிட்டே வீட்டு சுவர்ல சாஞ்சிக்கிட்டே தூங்கிருவோம். இப்ப, சாஞ்சிக்கிட்டு தூங்குகிறதுக்குக்கூட சுவர் இல்லை. கஜா புயலுக்கு அப்புறம் எங்கள் கூரை வீடு பாதிக்கும்மேல் சேதமடைஞ்சுப்போச்சு.

எங்க நிலைமையை அரசு அதிகாரிகள்கிட்ட பலமுறை எடுத்துச் சொல்லியும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அதை அப்படியே மறந்துட்டு வேலையைப் பார்க்க போயிட்டோம். அரசு கொஞ்சம் உதவி செஞ்சா போதும், எங்கள் குடும்பத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்துடுவேன். இப்போதைக்கு எனக்கு அரசு வேலை ஒண்ணு இருந்தா போதும். அதிகமா உழைச்சு என் குடும்பத்தை முன்னேற்றிடுவேன்’’ என்று கூறும் தனலட்சுமியின் வார்த்தையில் தன்னம்பிக்கை ஒளி மிளிர்கிறது.

No comments:

Post a Comment