.jpeg)
மனிதன், தனது தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி, சைகைதான். சைகை மொழி என்பது பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகளுடன் பேசப்படுவது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. இதைப்போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என பல வகைகள் உள்ளன.
அமெரிக்க சைகை மொழியில் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களையும் ஒரே கையால் சைகை செய்கின்றனர். மேலும், 8,000க்கும் மேற்பட்ட பல கை சைகைகளையும் பயன்படுத்துகின்றனர். பிரிட்டிஷ் மற்றும் இந்திய சைகை மொழியைப் பயன்படுத்தும் மக்கள், இரு கைகளையும் பயன்படுத்துகின்றனர். எனவே, சைகை மொழிகளுக்கும் பல இலக்கணங்கள் உண்டு. இந்திய சைகை மொழியைக் கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும் எளிமையாக தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
உலகில் பல சைகை மொழிகளை பலர் அறிமுகப்படுத்தி உள்ளனர். எனினும், சைகை மொழியின் தந்தை என்று அழைக்கப்படுபவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த காது கேளாதோரின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் மைக்கேல் திலேப்பின். காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர் பிறரின் உதடு அசைவுகளைக் கொண்டு, அவர்கள் பேசுவதை கணித்தனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை பிறர் புரிந்து கொள்வதற்கென ஒரு மொழியை முதன் முதலில் உருவாக்கியவர் சார்லஸ் மைக்கேல் திலேப்பின். அதுவே, சைகை மொழி எனப்பட்டது.
மூளை நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும், 'குளோபல் அபேசியா' போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சைகை மொழி பயன்படுகிறது. 1951 செப்டம்பர் 23ல் உலக காது கேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை செப்டம்பர் 23ம் தேதியை சர்வதேச சைகை மொழிகள் தினமாக அறிவித்தது. உலகம் முழுவதும் சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது முதன் முதலில் 2018ல் கொண்டாடப்பட்டது. சர்வதேச சைகை மொழிகளின் தினமானது, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.
தற்போது, சைகை மொழிக்கான பல புதிய வடிவங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பல, 'டிவி'யில், காது கேளாதோருக்கென வாசிக்கப்படும் செய்திகளில் பயன்படுத்தப்படுகின்றன. சைகை மொழிகளின் அவசியத்தை உணர்ந்து மத்திய அரசு 2005ம் ஆண்டு சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை ஏற்படுத்தியது. அதன் மூலம் தற்போது 10,000 சைகை மொழி வார்த்தைகள் வழக்கில் உள்ளன.
2022ம் ஆண்டின் சைகை மொழி தினத்தன்று சைகை மொழி இந்திய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. சைகை மொழியை இந்திய அரசியல் அமைப்பின் அதிகாரபூர்வ 23ம் மொழியாக சேர்க்க நடிகர் ரன் வீர் சிங் வலியுறுத்தி வருகிறார். இந்திய நீதிமன்றங்களில் இதுவரை சைகை மொழியில் யாரும் வாதாடியதில்லை. இதற்கு நீதிமன்ற வரலாற்றில் முதன்முதலாக 2023 செப்டம்பர் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி அளித்தார் உச்ச நீதிமன்ற, தலைமை நீதிபதி சந்திரசூட். நீதிமன்றங்களில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக சைகை மொழி, மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சாரா சன்னியை சைகை மொழி, மொழிபெயர்ப்பாளராக நியமித்து வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.
சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும். எனவே, சர்வதேச சைகை மொழிகள் தினத்தை விழிப்புணர்வுடன் கொண்டாடுவோம்.
No comments:
Post a Comment