FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, July 28, 2017

அப்துல் கலாம் சிலாகித்த மாற்றுத் திறனாளி! அப்துல் கலாம் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை

“உறக்கத்தில் வருவதல்ல கனவு
நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு”


- கடந்த தலைமுறையின் வெற்றிக்குக் காரணமான இந்த தன்னம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தவர் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம்; நேருவுக்குப்பின் இந்திய இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லா தரப்பினராலும் கொண்டாடப்பட்ட தலைவர். இன்று அவரது நினைவுநாள்...

ஜனாதிபதி என இந்தியாவின் மிக உயர்ந்த பதவியை எட்டியபின்னும் யதார்த்தமான எளிமை தாங்கிய மனிதராக அவர் இருந்தார். ஓய்வுக்குப்பின் டெல்லியில் பிரமாண்டமான மாளிகையை மத்திய அரசு அவருக்காக ஒதுக்கிக் காத்திருக்க, விமானம் ஏறி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சாதாரண வசதிகளைக் கொண்ட விருந்தினர் இல்லத்தில் தங்கினார் அந்த எளிய மனிதர். அரசாங்கம் அவரைத்தாங்கிக்கொள்ள தயாராக இருந்தபோதும் ஒற்றை வேலையாள்கூட இன்றி இளைஞர்கள், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக நாடு முழுவதும் சுற்றிவந்தவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று அவர் உரையாற்றினாலும் சென்னை ராமாபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளியில் சில வருடங்களுக்கு முன் 'வெற்றியடைந்தே தீருவேன்’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை உணர்ச்சியவமானது. அப்துல்கலாமின் பேச்சை மாணவர்களுக்கு சைகை மொழியில் தெரிவித்தார் ஒரு ஆசிரியர்.

அந்த விழாவில் ‘அவர் பேசும்போது, " தமிழக மக்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் வந்து உங்களைச் சந்தித்து, உரையாடக் கிடைத்த வாய்ப்புக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அதுதான் வெற்றியின் முதற்படி. நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒரு சமயம் வெளிநாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 1000 பேர், அத்லடிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தனர். என்னைப்பார்க்க விரும்பி அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுக்காக நான் ஒரு கவிதையை தயார் செய்து வைத்திருந்தேன். அந்தக் கவிதை இதுதான்...

'நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்
எங்களது மனம் வைரத்தை காட்டிலும் பலமானது
எங்களது தன்னம்பிக்கையால் எப்போதும் வெற்றிபெறுவோம்.
கடவுள் எங்களோடு இருக்கும்போது எங்களுக்கு எதிரி என்று யாரும் கிடையாது!'

-இதை வாசித்து முடித்ததும், ஈரான் நாட்டை சேர்ந்த முஸ்தபா என்ற மாணவன் என் அருகே தவழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு கால்களும் இல்லை. என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தான். அதில் ஒரு அழகான கவிதை இருந்தது. அதற்கு அவன் வைத்திருந்த தலைப்பு ‘மன தைரியம்’. அந்தக் கவிதையைப் படிக்கிறேன்; கேளுங்கள்...
‘எனக்கு கால்கள் இரண்டும் இல்லை
அழாதே அழாதே என்று என் மனசாட்சி சொல்கிறது
ஆம்! என் மனசாட்சி சொல்கிறது
நான் மன்னன் முன்பாகக் கூட மண்டியிட்டு வணங்கவேண்டியதில்லை மகனே என
நான் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவேன்!'

- அவனது மன உறுதியைக் கண்டு அசந்துபோனேன். 2 கால்களையும் இழந்த அவனுக்குள்தான் என்னவொரு தன்னம்பிக்கை. அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் நாம் விதைக்கவேண்டும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபோது மற்றொரு முறை ஹைதராபாத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர்கள் நுாற்றுக்கணக்கானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரிடமும், ‘யார் யார் என்னென்னவாக ஆவீர்கள்’ எனக் கேட்டேன். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது 9 ம் வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற மாணவன் ஒருவன், ‘சார் என் ஆசை, நான் ஒருநாள் இந்த நாட்டின் பார்வையற்ற முதல் குடியரசுத் தலைவனாவேன்’ என்றான். அவன் தன்னம்பிக்கையைக் கண்டு பிரமித்துப் போனேன். ‘உனது எண்ணம் பெரிது. ஆனால் விடாமுயற்சியோடு அறிவை தேடிப்பெற்று, கடுமையாக உழைத்தால் உன் லட்சியம் நிறைவேறும்' என வாழ்த்தினேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற 4 செயல்கள் அவசியம். முதலாவது, வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியத்தை வகுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாவது, அந்த லட்சியத்தை அடைய அறிவாற்றலை தொடர்ந்து பெருக்கிக் கொள்ள வேண்டும். அறிவை பெருக்குவது என்றால் நல்ல புத்தகங்களை வாசிப்பதும், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை ஊன்றிக்கேட்பது. மூன்றாவது, கடின உழைப்பு . நான்காவது, விடாமுயற்சி. அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையும்படி தொடர்ந்து முயற்சிப்பது. இந்த நான்கையும் கடைபிடித்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிபெறமுடியும். இது குறித்து என் கவிதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் அதைத் திரும்பச் சொல்லுங்கள்...

“நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
நான் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர; எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்.
தவழவேமாட்டேன்.
ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன் பறப்பேன்
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.”

வெற்றி என்பது ஒன்றின் இறுதிப்புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளி. இடைப்புள்ளிகளின் துணையின்றி இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியமல்ல. வெற்றியைக் கொண்டாடத் தவறினாலும் தோல்வியைக் கொண்டாடத் தவறக்கூடாது. ஏனென்றால் தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. அதுதான் நம் பயணத்தை முழுமை பெறச் செய்பவை. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாராட்டும் சந்தரப்பங்கள் வந்தால் பரிசாக புத்தகத்தை தாருங்கள். பள்ளி வயதிலேயே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். 

உறக்கத்தில் வருவதல்ல கனவு
நம்மை உறங்காமல் செய்வதுதான் கனவு!
- அந்தக் கனவை ஒவ்வொருவரும் நனவாக்கும் வகையில் உழைக்கவேண்டும்" என்று முடித்தபோது காதுகேளாத மாணவர்களின் கைதட்டல் அரங்கத்தை நிறைத்தது.

No comments:

Post a Comment