FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, June 25, 2017

‘எங்களை விடவா அந்த அதிகாரிகளுக்கு அக்கறை அதிகம்?!’ - திருப்பூர் மாற்றுத் திறனாளி பள்ளிக்காக கொதிக்கும் பெற்றோர்கள்

24.06.2017
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது. தங்களின் எதிர்காலத்தைக் கட்டமைத்துக்கொள்ள சீருடை உடுத்தி, உற்சாகமாய் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள் நம் குழந்தைகள். ஆனால், திருப்பூர் மாவட்டம் கோதபாளையத்தில் அமைந்திருக்கும் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனை நாள்களாக தாங்கள் பெற்று வந்த கல்வி, இனி கானல் நீராகிப்போய்விடுமோ என்ற அச்சம் அந்தக் குழந்தைகளை வாட்டி வதைக்கிறது.

கடந்த மாதம் இந்தப் பள்ளியின் தாளாளர் முருகசாமியும், பள்ளி ஊழியர்கள் சிலரும் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்த மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம், உடனடியாக இங்கு பயிலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழை வழங்கி வெளியேற்ற உத்தரவிட்டது.

ஒருவார காலமாக பல்வேறு வழிகளில் போராடிப்பார்த்த பள்ளி நிர்வாகம் வேறு வழியின்றி, மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க முடிவுசெய்தது. ஆனால், ஒரு மாணவன்கூட அதைப் பெற்றுக்கொண்டு வேறு பள்ளியில் போய் சேர்வதற்கு முன்வரவில்லை. அரசு அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு வந்து ‘இன்றே கடைசி நாள், அனைவரையும் வெளியேற்றுங்கள்’ என கட்டாயப்படுத்த, அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து பள்ளியின் நுழைவாயிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களுக்கு ஆதரவாகப் பெற்றோர்களும் களத்தில் இறங்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகள், எங்களுக்கு நீங்கள் ஒத்துழைக்கவில்லை எனில், பெற்றோர் உள்பட அனைவரின்மீதும் தீவிர நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டு பள்ளியைவிட்டு புறப்பட்டுச் சென்றனர். எதற்கும் அசராத மாணவர்கள், தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

105 மாணவர்களுடன் தொடங்கிய இந்தப் போராட்டதத்தில், தற்போது 300 பேர் கலந்துகொண்டுள்ளனர். கோதபாளையம் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தும் தகவல் அறிந்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் அவர்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் இணைந்துகொண்டார்கள். பள்ளி திறக்கும்வரை நாங்கள் போராடுவோம் என்று பதாகைகளை ஏந்திக்கொண்டு பள்ளி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

மதுரை, தேனி, விருதுநகர், சேலம் என தொலைதூரங்களில் இருந்து வந்துள்ள பெற்றோர்கள் எவருக்கும் தங்களின் பிள்ளைகளை இந்த பள்ளியைவிட்டு அழைத்துச் செல்ல மனமில்லை. எத்தனை நாள்கள் ஆனாலும், பரவாயில்லை. இங்கேயே இருந்து எங்கள் பிள்ளைகளை அவர்களின் வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டுத்தான் கிளம்புவோம் என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கிறார்கள் பெற்றோர்கள்.

இந்தப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை அழைத்த அரசு அதிகாரிகள், இந்தப் பள்ளியின் நிர்வாகமும், நடவடிக்கைகளும் சரியில்லை. எனவே, இங்கிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு நாங்கள் பரிந்துரைக்கும் பள்ளிகளில் சென்று சேர்த்துவிடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பட்டியலில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஒன்றில்கூட மாணவர்களுக்கு தங்குமிட வசதி கிடையாது. ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லை. அப்படி தங்கிப்படிக்கும் வசதி இருந்தாலும், பெற்றோர்கள்தான் பொறுப்பெடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதைவிடக் குறிப்பாக, அந்தப் பள்ளிகளில் எல்லாம் தங்களின் பிள்ளைகளை சேர்த்துவிட்டு, எந்தப் பயனும் இல்லாமல் போனதால்தான் இந்த திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் கூட்டி வந்து சேர்த்துவிட்டிருக்கிறார்கள். இப்போது மீண்டும் அங்கேயே போய் சேர்த்துவிட்டால், எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நாங்களே சிதைத்ததற்கு சமமாகிவிடும் என்று புலம்புகிறார்கள் பெற்றோர்கள். அதனால்தான் இந்தப் பள்ளியை விட்டு எங்களின் பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியாது என்று இவ்வளவு தீவிரமாக பெற்றோர்கள் போராடுகிறார்கள்..

இந்தப் பள்ளியில் பயிலும் மாணவனின் தாயார் வனிதா நம்மிடம் பேசினார். ''என் மகன் சுதாகரை 4 வயதில் இந்த பள்ளியில் சேர்த்தேன். இப்போது 10-ம் வகுப்பு படிக்கிறான். கணவனை இழந்த நான் தனியாளாக இருந்து என் இரண்டு மகன்களையும் வளர்க்க வேண்டிய சூழ்நிலை. இந்தப் பள்ளியும், முருகசாமி அய்யாவும் இல்லையென்றால் என் மகன்கள் என்னுடன் சேர்ந்து நெசவு வேலைக்கு வந்திருப்பார்கள். ஆனால், இப்போது எந்த கவலையும் இல்லாமல் படிக்கிறார்கள். கையில் பணமே இல்லாமல் ஒருவேளை சோற்றுக்கு நான் வழியில்லாமல் நின்றபோதுகூட என் மகனுக்கு இந்த பள்ளிக்கூடத்தில் 3 வேளை உணவுடன், தரமான கல்வி பெறுவதற்கும் வழியிருந்தது. எத்தனை சிரமப்பட்டாவது என் மகனை படிக்கவைத்துவிடலாம் என்ற வைராக்கியத்தில் நான் இருக்கிறேன். ஆனால், அரசாங்கமே இப்படியெல்லாம் சிரமப்படுத்தி என் மகனின் கல்வியைப் பிடுங்க நினைப்பதுதான் வேதனையளிக்கிறது'' என்றார்.

தையல் தொழிலாளியான ரெஜினாவின் மகன் இங்கு 10-ம் வகுப்பு படிக்கிறார், ''என் ஒரே மகன் பிரவினுக்கு பிறவியில் இருந்தே பேசுவதில் சிரமம். அரசாங்கப் பள்ளியில்தான் 6-ம் வகுப்பு வரைக்கும் படித்தான். ஆனால், அதுவரைக்கும் பள்ளியில் எந்தவொரு கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் என் மகனை சேர்த்துக்க மாட்டாங்க. விளையாட்டுப் போட்டியில கலந்துக்கப் போனாலும் துரத்தி விட்ருவாங்க.. வீட்டுக்கு வந்து அழுவான். நானே ஸ்கூல்ல போய் கேட்டேன். இங்க 60 பசங்க படிக்கிறாங்க, உங்க மகன்தான் வித்தியாசமா இருக்கான். இனிமேலும் இங்க வெச்சிருக்கிறது சிரமம். மாற்றுத்திறனாளிகள் படிக்கிற ஸ்கூல்ல சேர்த்துவிட்டிருங்கன்னு அவங்களே சொன்னாங்க, இந்த ஸ்கூல்ல வந்து சேர்ந்த பிறகுதான் என் மகன் முகத்துல சந்தோஷமே இருக்கு. இதுக்கு முன்னாடி படிச்ச ஸ்கூல் கிரவுண்டுக்குள்ளயே போக முடியாம தவிச்ச என் மகன், இந்த காதுகேளாதோர் பள்ளியில சேர்ந்த பிறகு ஜார்க்கண்ட் வரைக்கும் போய் வாலிபால் விளையாட்டுல கோப்பைகளை ஜெயிச்சிட்டு வந்தான். எங்க பசங்க படிக்கிற பள்ளிக்கூடம் சரியில்லைன்னு நாங்கதான் சொல்லணும். ஆனா கையில அதிகாரம் இருக்குன்னு எங்கயோ சென்னையில உக்காந்துட்டு ஒருத்தர் உத்தரவு போட்டா, உடனே நாங்க குழந்தைகளை கூட்டிட்டுப் போகணுமா?’' என்றார் கோபத்தோடு.

ஊட்டியிலிருந்து வந்திருக்கும் பிரேமா என்பவரின் மகள் காவ்யா இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். ''இந்தக் காலத்துல பொம்பளைப் பிள்ளையை வளர்க்குறது எத்தனை சிரமம்னு யாருக்கும் சொல்லி புரியவைக்க வேண்டியது இல்லை. அதுவும் ஒடம்புல ஒரு குறைபாடு இருக்குன்னா இந்த உலகத்துல எப்படியெல்லாம் ஒதுக்கி வைப்பாங்க. என் மகள் மாதிரி பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித்தர்ற பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டுல சில இடங்கள்லதான் இருக்கு. எல்லாப் பள்ளிக்கூடத்தையும் போய் பார்த்துட்டுதான் இங்க கொண்டு வந்து சேர்த்தேன். ஒவ்வொரு மாசமும் ஊட்டியில இருந்து வந்து என் மகளை பார்த்துட்டுப் போகவே 4000 வரைக்கும் செலவாகும். கையில பணம் இருந்தாதான் கெளம்பி வந்து பார்க்க முடியும். அதுக்கு வழியே இல்லாத நிலைமையிலும், முருகசாமி அய்யா இருக்கார்ங்கற நம்பிக்கைல தான் நாங்க ஊர்ல இருக்கோம். தான் பெத்த குழந்தைகளைப் போலத்தான் அந்த மனுஷன் இந்த குழந்தைகளை பார்த்துக்கிட்டார். எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடந்ததா சொல்லி, அந்த மனுஷன இப்ப கைது செஞ்சு, தலைகுனிய வெச்சிருக்காங்க. வயசுக்கு வந்த எம் புள்ளைய நானே தைரியமா இங்க படிக்க வெச்சிருக்கும்போது, எங்களைவிடவா அந்த அரசு அதிகாரிகளுக்கு எங்க குழந்தைங்க மேல அக்கறை இருந்திடப்போகுது?’ என்றார்.

ஜெய்னுலாபுதீன் என்ற கூலித்தொழிலாளியின் மகன் அசார் இந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பனியன் குடோனில் கூலி வேலைக்குப் போய் என் குடும்பத்தை பார்த்துட்டு இருந்தேன். வாங்குற சம்பளத்த வெச்சு ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பிடுறதே அதிசயம். இதுல என் வாய் பேசமுடியாத மகனை எங்க போய் படிக்க வைக்கிறது, பல வருஷமா வீட்டுலதான் இருந்தான். என்னோட நண்பர்கள் சிலர் சொல்லித்தான் இங்க கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். வீட்டுலயே கிடந்த பையன் புதுசா ஒரு எடத்துல கொண்டுபோய் விட்டா என்ன பாடுபடுவானோன்னு மனசு கெடந்து துடிச்சிது. இன்னையோட சேர்த்து மொத்தம் 12 வருஷம் ஆச்சு. இடையில ஒருநாள் கூட இந்தப் பள்ளிக்கூடம் எனக்கு பிடிக்கலைன்னு என் மகன் ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. இப்போ எனக்கு கிட்னியில் பிரச்னை, கோவை அரசு மருத்துவமனையில்தான் கடந்த 3 மாசமா டயாலிஸிஸ் சிகிச்சையில இருக்கேன். இனி என்னால ஓடியாடி உழைக்க முடியாது. என் மகன் படிச்சு முடிச்சு இனி எங்க குடும்பத்தை பார்த்துக்குவான்னுதான் நம்பிட்டு இருந்தோம். எங்க கனவுல கல்லை எறியப் பார்க்குது அரசாங்கம். இனி இந்த ஒடம்ப வெச்சிட்டு என் மகனை கூட்டிட்டுப் போய் வேற எந்த ஸ்கூல்ல சேர்க்க முடியும்?’' என்றார்.

No comments:

Post a Comment